குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Thursday, June 27, 2013

முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரம்; கருத்துக்களம்

                               பஹமுன அஸாம்

அண்மைக்காலத்தில் எமது நாட்டில் சர்ச்சையைக் கிளப்பிய விடயங்களில் ஒன்று தான் முஸ்லீம் பெண்களின் ஆடை விவகாரம். பொது பலசேனா போன்ற இனவாதஅமைப்புக்கள் இன்னும் முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் சில தேவையற்ற கருத்துக்களைச் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றன. 

மன்னம்பிட்டிய, பாணந்துறை போன்ற இடங்களின் அபாயா அணிந்த முஸ்லிம் பெண்கள் தாக்கப்பட்ட போது எந்த முஸ்லீம் அரசியல் வாதியும் வாய்திறக்கவில்லை. அதேசமயம் இந்தியாவில் ஒரு தேரர் தாக்கப்பட்ட போது உடனடியாக அவ்விடயத்தை ஜெனீவாவுக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தேசிய பட்டியல் முஸ்லீம் தரப்பு எம்.பி. கவலைப்பட்டதைப் பலர் அறிந்திருப்பீர்கள். தனது சமூகத்திலுள்ள பெண்களுக்கு  பிரச்சினை ஏற்பட்ட போது வாய்மூடி இருந்து விட்டு ஆக்கிரமிப்பு வர்க்கத்தினர் கொடுக்கும் காசுக்கும் சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்படும் இப்படிப்பட்டவர்களை தமது பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யும் மக்களே இவர்களின் இத்தகைய செயற்பாடுகளுக்கான முழுப் பொறுப்புக்களையும் ஏற்க வேண்டும்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தையே பின்பற்றுகிறார்கள். திருமணம் விவாகரத்து போன்ற எல்லாமே ஷரீஆ சட்டப் பிரகாரமே மேற் கொள்ளப்படுகின்றன. அந்த வகையில் தனக்கு திருமணம் முடிக்க அனுமதிக்கப்பட்டவர்ளிடத்தில் தனது உடல் அங்கங்கள் தெரியும் விதத்தில் நடந்து கொள்வது ஹராமாகும். கை,கால் பாதம், முகம் போன்றவற்றைக் காட்ட அணுமதி உள்ளது.

மெல்லிய, இறுக்கமான ஆடைகள், உடலின் அங்கங்கள் தெரியக் கூடிய ஆடைகள் அணிவதும் ஹராமாகும். தனது வீட்டுக்குள் பெண்கள் சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் வெளியே செல்லும் போது மார்க்கம் அனுதித்ததன் பிரகாரமே ஆடைஅணிகலன்களை அணிய வேண்டும். 
பாலியல் ரீதியான பிரச்சினைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு அபாயாக்கள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கின்றன.  
அபாயா விடயத்தில் பொதுபலசேனா அமைப்பால் அண்மையில் பல சர்ச்சைகள் கிளம்பின. எனவே இந்த அபாயா விடயத்தில் பொதுபலசேனாவின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவ்வமைப்பின் இணைப்பாளர் பேராசிரியர் டிலன்த விதானகேயைத் தொடர்பு கொண்டு கேட்ட போது;


முஸ்லிம் பெண்களின் ஆடைகள் தொடர்பில் எங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இதை நாம் ஒரு மத ரீதியான பிரச்சினையாகப்  பார்க்கவில்லை.  பொது இடங்களில் முகத்தை மூடி நடமாடுவதைத் தான் எதிர்க்கின்றோம். 
ஒருவர் முழு உடம்பையும் மறைத்துக் கொண்டு வந்தால் அவர் யார் எப்படிப்பட்டவர் என்ற எதையும் எம்மால் இனங்கண்டு கொள்ள முடியாது. உதாரணமாக பாதையில் செல்கின்ற வாகனங்களை எடுத்துக் கொண்டால் அவற்றின் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டிருந்தால் (டின்டட்) பொலிஸார் அவற்றை அகற்றி விடுகின்றனர். ஏனென்றால் அவர்களால் உள்ளே யார் இருக்கின்றார்கள் என்று அறிந்து கொள்ள முடியாது. அது குற்றச் செயல்களுக்கு வழிவகுக்கும். 
அதே போன்று தான் முகத்தை மூடி ஆடை அணிவதால் அவரை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. இது பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும். எனவே தான் நாம் இந்த ஆடைகளை எதிர்க்கின்றோம். அவர்கள் வீட்டிலும் தனிப்பட்ட இடங்களிலும் எவ்வாறு வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும். ஆனால் பொது இடங்களில் முழுமையாக மறைத்து இருப்பதையே நாம் எதிர்க்கின்றோம் என்று தெரிவித்தார்.

அபாயாவிடயத்தில் பொதுபலசேனா அமைப்பினர் ஏற்படுத்திய பிரச்சினைகளுக்கு அவர்கள் தரப்பிலிருந்து கூறும் நியாயம் இதுதான்.

இதே வேøளை இது தொடர்பாக இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை அறிந்து கொள்வதற்காக இஸ்லாம்  மற்றும் இஸ்லாமிய நாகரீக விரிவுரையாளர் எம்.ஆர் .அஸாத்திடம்  முஸ்லிம் பெண்கள் ஏன் அபாயா அணிகிறார்கள். இதனால் என்ன நன்மை இருக்கிறது என்று கேட்டபோது;

“இன்று நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாலியல் பலாத்காரம் வல்லுறவு போன்றவை பாரியளவில் இடம்பெறுகின்றன. இதற்கு முக்கிய காரணம் பெண்கள் கவர்ச்சியான ஆடைகள் அணிவதுதான். உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் பலவிதமான ஆடைகளை அணிந்து  பொது இடங்களில் செல்கிறார்கள். குறிப்பாக சில ஆடைகள் பாலியல் உணர்வுகøள் தூண்டுவனவாகவே உள்ளன. அபாயாவைப் பொறுத்தவரையில் அந்த நிலமை இல்லை.  அவ்வகை ஆடைகள் உணர்ச்சிகளைத் தூண்டும் விதத்தில் அமைவதில்லை. எனவே அவர்கள் குற்றச்செயல்களில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். பெண்கள் பாலியல் பிரச்சினைகளுக்குள் தள்ளப்படுவதற்கு முக்கிய காரணி அவர்கள் அணியும் ஆடைகள் தான். 

அபாயாக்கள் மூலம் முஸ்லிம் பெண்களின் சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்ற ஒரு கருத்து பரவி வருகிறது. உண்மையில் இது ஒரு தவறான கருத்தாகும். முஸ்லிம் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அபாயாவை விரும்பியே அணிகிறார்கள். 

இதேவேளை இன்று ஒரு சில பெண்கள் அபாயாவை ஒரு ஆடம்பரப் பொருளாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இஸ்லாம் அனுமதித்த வரையறைக்கு அப்பால் போய் இறுக்கமானவையாகவும், கவர்ச்சியாகவும் அணிகிறார்கள். இவ்வாறான செயற்பாடுகளினாலேயே அபாயாவின் தனித்துவம் சிதைக்கப்பட்டு ஏனையவர்கள் அதை விமர்சிக்கும் நிலைக்கு போயுள்ளது எனலாம். 

அபாயாவின் முக்கியமான நோக்கம் எமது உடலை மற்றவர்களுக்குக் காட்டக் கூடாது என்பதாகும். இந்த ஆடையின் மூலமாக அல்லாஹ்வின் திருப்தியை நாம் பெறுகிறோமா என்பதிலும் அதை அணிபவர்கள் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும்.’ என்று தெரிவித்தார்.

அதே போன்று இந்த அபாயா தொடர்பாக தனது கருத்துக்களை இவ்வாறு தெரிவிக்கின்றார் குருநாகல் ஹுசைனிய்யா அரபுக் கல்லூரி அதிபர் எம்.எம்.எம்.இலியாஸ் மௌலவி;

முஸ்லீம்கள் இஸ்லாம் மதம் அண்மைக்காலமாக  கடுமையாக விமர்சிக்கப் பட்டு வருவதை அறிவார்கள். அதிலும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள பலவிதமான உரிமைகளைப் பற்றியும் பலர் விமர்சனம் செய்கிறார்கள் குறிப்பாக பெண்களின் ஆடைகள் தொடர்பில் இன்று பலவிதமான சர்சைகள் ஏற்பட்டுள்ளன.

ஆனால் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள கண்ணியத்தின் உச்சகட்டமாகவே அவர்களின் உடலை மறைக்கும் விதமான சிறப்பான ஆடை முறையை ஏற்படுத்தியுள்ளது எனலாம். 

ஆனால் இன்று ஒரு சில முஸ்லீம் பெண்கள் இந்த அபாயாவை ஒரு நாகரீகஉடடையாகக் (பேஷனாக) கருதி அணிகிறார்கள். இது உண்மையில் வேதனைக்குரிய ஒரு விடயமாகும். என்று கவலையுடன்  தனது கருத்தைச்  சொன்னார்.

உண்மையில் இந்த அபாயாக்களைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு  ஒரு பயனுள்ள பாதுகாப்பான ஆடையாகவே உள்ளது. இன்று பலர் அதை அறியாமல் அணிவதும் அதைப்பற்றிக் கதைப்பதும் தான் கவலைக்குரியதாக உள்ளது.

பலர் இன்று முஸ்லிம் பெண்களின் ஆடைஅமைப்பை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்ற அதே நேரத்தில், ஒரு தேரர் முஸ்லிம் பெண்களின் ஆடை அமைப்பைப் பற்றி நல்ல முறையில் கூறியுள்ளமை தான் வியப்பாக உள்ளது. 


சர்வமத ஆய்வு வட்டம் அண்மையில் நிப்போன் ஹோட்டலில் நடத்திய  செய்தியாளர் மகாநாட்டில் கலாநிதி ஹுனுபலாக வஜிர ஸ்ரீ நாயக்க தேரர் கூறிய கருத்து இவ்வாறு இருந்தது;

முஸ்லீம் பெண்கள் அணியும் ஆடைகள் ஒழுக்கம் மிக்கதாகும். முஸ்லீம் மாணவிகள் அணியும் ஆடைகள் சிறப்பானவை. இதனை நாமும் பின்பற்ற வேண்டும். அண்மையில் முஸ்லீம் நாடொன்றுக்கு நான் சென்றபோது அங்குள்ள பெண்கள் அணிந்திருந்த ஆடைகள் என்னை மிகவும் கவர்ந்தது. அவை மிகவும் அழகாகவும் இருந்தன எனவே அந்த ஆடை அமைப்பை நாமும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

எனவே இந்தக் கருத்துக்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது முஸ்லிம் பெண்களின் ஆடைஅமைப்பு எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் விதத்திலேயே அமைந்திருக்கின்றது. அபாயா விடயத்தில் பிரச்சினை எழுவதற்கு ஒரு சிலரின் இனவாத தூண்டுதல்களே காரணமாகும்.

முழுமையாக உடை அணிந்து ஒழுக்கமாக செல்பவர்களை பிடிக்காத அந்த விஷமிகளுக்கு பெண்கள் அரைகுறை ஆடையுடனும்  கவர்ச்சியாகவும் செல்வது தான் பிடிக்கும் போலிருக்கிறது.



No comments:

Post a Comment