குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Wednesday, June 20, 2012

பரிதாபமான வெளிநாட்டு வாழ்க்கை


அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டோஹாவிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி புரிந்தார். இந்த நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதைப் புலன் விசாரணை செய்த நமது நண்பர் பல அதிர்ச்சியூட்டும் விடயங்களைக் கண்டுபிடித்தார். இதைப் போன்ற தற்கொலைகள் பல நடைபெறுகின்றன என்ற தகவல் அவற்றிலொன்று.
இவர் தமது விசாரணை அறிக்கையில் நிறுவனத்தின் பல மனிதாபிமானமற்ற செயல்களைக் குறை கூறி எழுதியிருந்ததால் நிறுவன முதலாளிகள் கோபமடைந்தனர். தமது அறிக்கையில் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தியதால் அவரை வேலையிலிருந்து நீக்கத் தீர்மானித்தனர். முதலாளிகள் அளித்த விளக்கம் தொழிலாளர் நல அலுவலர் என்ற பதவி அரசாங்கம் வலியுறுத்துவதனால் உருவாக்கப்பட்டது. அதாவது கண் துடைப்புக்காக. மனித உரிமை மீறல் குறித்து எதையும் நீ பேசக் கூடாது என்றனர். அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.
இங்கு பணி புரியும் பல தொழிலாளர்களின் நிலை பரிதாபமானது. ஏறத்தாழ 90 வீதத்தினர் வறுமையில்தான் வாழுகின்றனர். காலையில் இரண்டு குபூசை டீயில் தொட்டுச் சாப்பிட்டுவிட்டு வேலைக்குச் செல்லும் தொழிலாளர் பலர் உள்ளனர். தங்கள் வசதிகளுக்கென்று மிகக் குறைவாக செலவழித்து மீதிப்பணத்தை ஊரில் காத்து நிற்கும் மனைவி பிள்ளைகளுக்கு அனுப்பி விடுகிறார்கள். இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலோர் ஒப்பந்த ஊதியத்தில் வருபவர்கள். ஆசியாவின் பல நாடுகளிலிருந்தும் வருகிறார்கள். வேலைக்கு ஆளெடுக்கும் பல ஏஜெண்டுகள் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். இவர்கள், கட்டார் நாட்டில் வேலை, கை நிறையச் சம்பளம், குளிர்விக்கப்பட்ட வீடுகள், நல்ல உணவு, போக வர வாகன வசதி என்று அள்ளி விடுவார்கள். சொந்த நாட்டில் போதுமான அளவிற்குச் சம்பாதிக்க முடியவில்லை, பிள்ளைகளை நன்கு படிக்க வைக்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பலர் இந்த ஏஜெண்டுகள் விரிக்கும் மாய வலையில் சிக்கி விடுவார்கள். கடவுச்சீட்டுக்காக, விசாவிற்காக இரண்டு இலட்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும் என்று ஏஜெண்டுகள் வற்புறுத்துவார்கள். நிறையச் சம்பளம்தான் கிடைத்து விடுமே என்ற நம்பிக்கையிலும் கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்ற ஆர்வத்திலும் கையிலிருக்கிற சேமிப்பு, மனைவி, பிள்ளைகளின் தங்க நகைகள் அனைத்தையும் அடகு வைத்து வருகிற பணம், சொந்தக்காரர், நண்பர்களிடம் வாங்கிய கடன் அனைத்தையும் கொண்டுவந்து ஏஜெண்டுகளிடம் கொடுப்பார்கள். கண்களில் கனவுகளுடன் – மனதில் நிறைந்த எதிர்பார்ப்புகளுடன் மனைவி மக்கள் விடை கொடுத்து அனுப்புவர்.
இங்கு வந்து இறங்கும்போதுதான் தெரியும், எவ்வளவு ஏமாற்றப்பட்டு விட்டோம் என்று. இவர்களின் கடவுச்சீட்டு ஏஜெண்டுகள் கையில் இருக்கும். தப்பிக்க இயலாது. தஙகுவதற்கு கோழிக்கூண்டு போன்ற ‘போர்ட்டாகேபின்’ கள், ஒரே அறையில் அடுக்குக் கட்டில்களில் பலர், வேலை செய்யாத ஏர் கண்டிஷன்கள், வேலைக்குச் செல்ல குளிர்விக்கப்படாத பேருந்துகள் – இவர்கள் படும் அவதி சொல்லக்கூடியவை அல்ல. இந்தத் துன்பங்களை எல்லாம் தாண்டி பெருந்துன்பம் ஒன்று காத்துக்கொண்டிருக்கும். அதுதான் மிகக் குறைந்த ஊதியம். சாதாரணமாக ஒருவருக்கு ஆயிரம் ரியாலுக்கும் மிகக் குறைவாகவே சம்பளம் கொடுக்கப்படுகிறது. அறுநூறிலிருந்து எண்ணூறு ரியால் ஊதியமே கொடுக்கப்படுகிறது. இதில்தான் வேலை வாங்குவதற்கென்று பட்ட கடன்களை அடைக்க வேண்டும், நகைகளை மீட்க வேண்டும், குடும்பத்தினர் சாப்பிட வேண்டும், பிள்ளைகள் படிக்க வேண்டும். என்ன செய்ய இயலும்? சொந்த நாட்டிற்குத் திரும்பிச் செல்லவும் முடியாது. நிர்ப்பந்தமான நிலை. தங்களையே மாய்த்துக்கொள்ளத் துணிந்து விடுகின்றனர் பலர்.
இந்நிலை மாற என்ன செய்ய முடியும்? இந்த நாட்டின்(கட்டார்) ஆட்சியாளர்களைக் குறை சொல்ல இயலாது. பல நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம் கொடுத்தாலும் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்த ஏஜெண்டுகள் 75 வீதத்தை தங்களுக்கென்று எடுத்துக் கொள்கின்றனர். இதில் மிகப்பெரிய குற்றவாளிகள் ஏஜெண்டுகள்தாம். ஆசை காட்டி மோசம் செய்கிறவர்கள்.
பல நாடுகளில் அரசாங்கமே வேலைவாய்ப்புகளுக்கான ஒப்பந்தங்களை மேற்பார்வையிட்டு இடைத்தரகர்கள் இல்லாமல் பணிகளைப் பெற்றுக்கொள்ள உதவுகின்றன. இங்கு பணிகளுக்கு வரத் துடித்துக் கொண்டிருப்பவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஜெபராஜ் தேவசகாயம்
ஏஸ்ரீலங்கா

Tuesday, June 12, 2012

டெங்கு ஒழிப்பு போருக்கு எப்போதும் தயார்நிலை அவசியம்

டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு ஏற்ற வகையில் கவனயீனமாக நடந்து கொண்டதற்காக கம்பஹா மாவட்டத்திலுள்ள  18 பாடசாலைகளின் அதிபர்கள் மீது வழக்கு தொடர்வதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  டெங்கு ஒழிப்பு வாரத்தில் இந்த மாவட்டத்தில் 27 பாடசாலைகள் சோதனைக்குட்படுத்தப்பட்ட வேளையில் மேற்படி 18 பாடசாலை வளவுகள் மோசமான நிலையில் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்ததன் காரணமாகவே அமைச்சு இந்த கடுமையான நடவடிக்கையை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.
டெங்குநோய்  அபாயம் எமது நாட்டில் நீண்டகாலமாகவே காணப்பட்டு வருகின்றது.பல நூறுபேர் டெங்கு நோய் காரணமாக மரணத்தை அரவணைக்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து மோசமான நிலை உருவாகிவரும் நிலையில் கூட இளம் சந்ததிக்கு கல்வி அறிவை புகட்டும் பாடசாலைகளில் கூட சுகாதாரத்தைப் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க பாடசாலை அதிபர்கள் உட்பட ஆசிரியர்கள் தவறிவிட்டனர். நடந்து  போன அனர்த்தங்களினால் பாடம் கற்றுக்கொள்ள தவறுவோர் மீது தயவு  தாட்சண்யம் காட்டப்படக்கூடாது என்பதில் நாமும் உறுதியான நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றோம்.
வருடாவருடம் டெங்கு ஒழிப்புக்கென ஒருவாரத்தை மாத்திரம் பிரகடனப் படுத்துவதால் பயனுண்டா என்ற கேள்வி எழுப்புவது கூட நியாயமானதாகவே தெரிகிறது. வருடத்துக்கு ஒரு தடவை ஒரு வாரத்தில் மாத்திரம் சுகாதாரத்தைப் பேணுவதால் பிரச்சினை தீர்ந்து விடவா போகின்றது. சுகாதார அமைச்சின் கணக்கெடுப்பின்படி  பிரதான நகரங்கள் உட்பட நாடு முழுவதும் டெங்கு அபாயம் தொடர்ந்த வண்ணமே காணப்படுகின்றது. அதுவும் ஒட்டுமொத்த கணக்கெடுப்பில் கம்பஹா மாவட்டமே மிக மோசமான பிரதேசமாக இருப்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.
டெங்கு ஒழிப்பை அறிக்கைகள், பிரசாரங்கள் மூலம் தீர்வுகாண முடியாது. நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் தன்னைப்பற்றி உணரவேண்டும். தத்தமது வீடு, வீட்டுத் தோட்டம் என்பவற்றை சுத்தமாக வைத்திருக்க முன்வந்தால் அதன் மூலம் டெங்கு நுளம்பு ஒழிப்புத் திட்டத்தில் வெற்றி இலக்கை அடைய முடியும். இன்று டெங்கு ஒழிப்பு வாரம்  கூட அரசியல் பிரசாரம் போன்றதாகவே மாறியுள்ளது. டெங்கு ஒழிப்பு வாரம் முடிந்த  பின்னர் இன்னும் ஒரு வருட காலம் வரை அதனை மறந்து விடும்  நிலையே காணப்படுகிறது. இதற்கிடையில் டெங்கு நோயால் எத்தனை உயிர்கள்  பலியாகின்றன என்பதை அடுத்த வருடக் கணக்கெடுப்பிலேயே அறிந்து கொள்ள முடிகிறது.
இப்பாடசாலைகளுக்கு அப்பால் கம்பஹா மாவட்டத்தில் 152 இடங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதில் நூற்றுக்கும் அதிகமான இடங்கள் டெங்கு நுளம்பு பரவும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் மக்கள் செயற்பாடுகள் தொடரும் வரை டெங்கு நுளம்புக்கெதிரான  போராட்டத்தில் வெற்றிகாண முடியாது. அரசாங்கமும் இந்த விடயத்தில் மேலோட்டமாகச் செயற்பட்டு பழியை மக்கள் மீது போட்டு தப்பித்துக் கொள்ள முடியாது. காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.  கம்பஹா மாவட்ட பாடசாலை அதிபர்கள் 18 பேரும் தண்டிக்கப்படுவதால் மாத்திரம் காரியம் முடிந்துவிடப்போவதில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படத்தான் வேண்டும். ஆனால் அது  போன்ற குற்றங்கள், தவறுகள், பாராமுகமான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். டெங்கு ஒழிப்புக்கான விரிவான திட்டம்  அறிமுகப்படுத்தப்படவேண்டும். இதில் முக்கிய விடயம் ஒன்றை சுட்டிக்காட்ட முடியும். முன்பு நாட்டின் சகல கிராமங்களிலும் சுகாதாரப் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இன்று அவை தொகுதிக்கு ஒன்று என்ற அடிப்படையிலேயே காணப்படுகின்றனர்.  40, 50 கிராமங்களைக் கொண்ட ஒரு தொகுதிக்கு ஒரு சுகாதார உத்தியோகத்தரால் உரிய  சேவையாற்ற முடியுமா ? மீண்டும் கிராமத்திற்கு ஒரு சுகாதார அதிகாரிகள் ( ஏஞுச்டூtட ஐணண்ணீஞுஞிtணிணூ) நியமிக்கப்படுவதன் மூலம் கிராம மக்கள் மத்தியில் சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அடுத்த வருட டெங்கு ஒழிப்பு வாரம் வரை காத்திராமல் இன்றே காத்திரமான பணிகளை முன்னெடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் டெங்கு நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க தயாராக வேண்டும்.
தினக்குரல் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து

Saturday, June 2, 2012

கவிஞர் அஸ்மினுடன் ஒரு சந்திப்பு


நான் திரைப்பாடலாசிரியராக அறிமுகமாகும்

“நான்’’


ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும்,அறியப்பட்டுவரும் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில் இசையமைப்பாளர்விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளள கவிஞர்அஸ்மினுடனான ஒரு சந்திப்பின் சாரல்.

வசந்தம்TV-யில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும், திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார்.

சக்தி TV-யினால் நடாத்தப்பட்ட ‘இசை இளவரசர்கள்’ போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர், தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003)
பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) அகஸ்தியர் விருது
(2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.
சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘பனைமரக்காடு’ தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ‘நான்’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.

வணக்கம்...நான் கவிஞர் அஸ்மின்! இலங்கையின் தென்கிழக்கு பிராந்தியத்தில் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்கும் பொத்துவில்தான் நான் பிறந்த இடம்.
ஆரம்பம் முதல் உயர்தரம் வரை பொத்துவில் மத்திய கல்லூரியில்தான் கல்வி கற்றேன். இப்பொழுது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் கல்வியை தொடர்வதோடு வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றேன்.

நகரத்தின் புகையை குடித்து வாழ்பவர்களை விட கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாகவே கவிதை வரும். என் கிராமமே அழகிய கவிதை. அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன்.

ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே திருவாக வேண்டும். தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் கோடுகளால் வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திலே, நெஞ்சின் ஆழத்திலே கற்பனைத் தீ உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில் அவன் பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்க வேண்டும்.
எனக்குள் பந்தலிடும் பாட்டுப் பூக்களுக்குள் இருந்து என் பாட்டன் முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள். மேலும் சிறிய வயதில் இருந்தே எனக்குள் இருந்த இடையறாத வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது. இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.
பாலர் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியர் பாடப் புத்தகத்தில் உள்ள பாடல்களை இசையோடு பாடிக்காட்டுவார். அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் ஐந்தாம், ஆறாம் தரங்களில் படிக்கின்றபோது புத்தகத்தில் உள்ள பாடல்களை ஓசை நயத்தோடு நானும் பாட ஆரம்பித்து விட்டேன். அது இற்றைவரை தொடர்கின்றது. இப்பொழுதும் பாரதி, பாரதிதாசன், காசியானந்தன், மஹாகவி, நீலாவாணன், சுபத்திரன் கவிதைகளை ரசித்து ஓசையோடு பாடும் பழக்கம் இருக்கின்றது. இந்த நிகழ்வும் என்னை கவிஞனாக செதுக்கியிருக்கலாம்.

தரம் ஒன்பதில் கல்வி கற்கும்போதே எனக்குள் கவிஞன் இருப்பதை உணர ஆரம்பித்தேன். அதனால் கண்டதையும் ரசித்தேன், கண்களையும் ரசித்தேன், காணாமலும் ரசித்தேன். அந்த காலகட்டத்தில் பித்தளையில் கூட தங்கத்தை தேடியிருக்கின்றேன் என்பதை இப்பொழுது நினைக்கும்போது ஒரு பக்கம் வருத்தமாக இருந்தாலும் மறுபக்கம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏனெனில் அதனால்தானே இன்று நான் கவிஞனாய் போனேன்.

நேர்காணல்.எஸ்.ரோஷன்

Friday, June 1, 2012

இணைய ஒழுங்கமைப்புக்கு ஐ.நா. ராடார் அவசியமா?

இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளிலும் கூட பொருளாதார, சமூக, கலாசார முறைமைகளை மீளக்கட்டமைப்பதற்கான வலுவான சக்தியாக இணையம் (இன்ரர்நெற்) இன்று வியாபகமெடுத்து வருகின்ற நிலையில் இதனை அரசாங்க மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச அமைப்பான ஐ.நா. சபையூடாகவும் ஒழுங்கமைப்புக்கு உட்படுத்த வேண்டுமென்ற பிரேரணைகள் முன்வைக்கப்பட்டிருப்பதை அறிய முடிகிறது.

இந்த இணையமானது மிகவும் அனுகூலமான தொடர்பு ஊடகமென்பதை பெரும்பாலானவர்கள் உணர்ந்து கொள்ள முடிகின்றது. கல்விமான்கள், தொழில்நுட்பவியலாளர்கள், பாரிய வர்த்தகத்துறையிலிருந்து சவாலை எதிர்நோக்கும் சிறிய மற்றும் புதிதாக வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்போர் இந்த இணையத்தால் ஆரம்பத்தில் பாரியளவு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. இப்போது அந்தக் கட்டத்தை உலகம் தாண்டிச் சென்று விட்டது. இலட்சோப இலட்சம் டிஜிட்டல் பரப்பு வலைப்பின்னல் கட்டுமானத்தை ஒழுங்கமைவான சில பரப்புகளினூடாக  (கூகுள், பேஸ்புக், டுவிட்டர், அமேசன் போன்ற இணையத்தளங்கள்) இன்று நாம் பயன்படுத்துகின்றோம். ஆனால், இணையத்தின் திட்டங்கள் ஒரு சில பாரிய இணையத்தளங்களுடன் பிணைப்புகளைக் கொண்டதாகவே உருவாகிவருவதாகவும் பொதுமக்களுக்கான வெளிப்படைத்தன்மை காணப்படாத நிலைமை மேலோங்கி வருவதாகவும் மாற்றுக்கருத்துகள் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

"இணையத்தை' எவருமே ஆட்சி செய்ய முடியாது என்பது உண்மையில் வெறும் மாயைதான். அரசியல், பொருளாதார ரீதியில் பலம்வாய்ந்த சக்திகளினாலேயே "இணையம்' வடிவமைக்கப்படுவதை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட கம்பனிகள் இணையத்தின் பெரும்பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை இதற்கு உதாரணமாகக் காட்ட முடியும்.
இதேவேளை ஐ.நா.வின் கட்டுப்பாட்டின் கீழ் இணையத்தை ஒழுங்குபடுத்தும் யோசனையைக் கடந்த 2011 அக்டோபரில் இந்தியா சமர்ப்பித்திருந்தது. இணையம் தொடர்பான கொள்கைகள் குறித்து அரசாங்கங்களுக்கிடையிலான 50 பேர் கொண்ட குழுவை நியமிக்கும் யோசனையை இந்தியா தெரிவித்திருந்தது. ஜனநாயக ரீதியில் இணையமானது நிர்வகிக்கப்பட வேண்டியது சிறப்பான யோசனைதான். அதாவது சகல குழுக்கள், பொதுமக்கள் நாட்களை சமத்துவமான முறையில் சம்பந்தப்படுத்தி இந்த இணையத்தை நிர்வகிப்பதற்கு ஒரு ஒழுங்கமைப்புக் கொள்கையை சர்வதேச அமைப்பான ஐ.நா. மட்டத்தில் ஏற்படுத்துவது ஜனநாயக ரீதியில் ஆரோக்கியமான விடயம்தான். ஆனால், நாணயத்தின் மறுபக்கம் போன்று இது ஐ.நா. வின் கீழ் உள்ள இந்த உத்தேச ஏற்பாடுகளின் பிரகாரம் பலம்வாய்ந்த நாடுகள் தமது அரசியல் பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கும் வறிய நாடுகளை தொடர்ந்தும்  தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்கும் அந்நாடுகளின் உள்நாட்டு அரசியல், பொருளாதார, சமூக விவகாரங்களில் மூக்கை நுழைப்பதற்கும் இந்த உத்தேச ஐ.நா. போர்வையை பயன்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகளே அதிகளவில் உள்ளன.  மனித உரிமைகள், சிவில், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் என்பன போன்ற விட்டுக்கொடுக்க முடியாதவற்றை அடிப்படையாகக் கொண்ட மனித சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே"இணையம்' நிர்வகிக்கப்படுவது அவசியம். அத்துடன் இதனை நிர்வகிக்கும் முறைமையானது வெளிப்படைத்தன்மையைக் கொண்டதாகவும் சகல தரப்பினரையும் உள்ளீர்த்ததாகவும் இருக்க வேண்டும்.

எந்தவொரு நாடும் ஏகபோக உரிமையை இணையத்தில் கொண்டிருக்காத விதத்தில் இணைய நிர்வாகம் தொடர்பான கொள்கையை ஐ.நா. வானது தனது உறுப்பு நாடுகளூடாக வகுத்து செயற்படுவது சிறப்பானதாகும். ஆனால், லிபியா, எகிப்து இப்போது சிரியாவென "அரபு வசந்தத்தில்'  எதேச்சாதிகார ஆட்சியாளர்கள் தூக்கில் வீசப்பட்டதற்கு சமூக இணையத்தளங்களின் பங்களிப்பே முக்கியமானதாகக் கருதப்படும் நிலையில் சமூக இணையத்தளங்களைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கைகளில் அரசாங்கங்கள் திட்டங்களை வகுத்துச் செயற்படுவதில் முனைப்புக் காட்டுவது எதிர்பார்க்கக்கூடிய விடயம்தான்.

தினக்குரல் ஆசிரியர் தலையங்கத்திலிருந்து