குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Thursday, May 30, 2013

தற்கொலை பிரச்சினைகளுக்குத் தீர்வல்ல!

பஹமுன அஸாம்


2013.05.17 வவுனியா தாண்டிக்குளம்.
3 பெண் பிள்ளைகள் உயிரிழப்பு.

2013.05.21 ஹொரணை.
                                4 நாள் வயதுடைய குழந்தை உயிரிழப்பு.

2013.05.21 திஸ்ஸமகாராம யுதகண்டிய.
5 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு.

2013.05.27 வாழைச்சேனை மீராவேடை.
இரு பெண் குழந்தைகள் உயிரிழப்பு




மனிதன் தன் வாழ்க்கையில் அனுபவிக்கும் 16 செல்வங்களில் கிடைத்தற்கரியது மழலைச் செல்வம். அது எல்லோருக்கும் இலகுவில் கிடைத்துவிடாது.ஒரு குழந்தைக்காக எத்தனையோ விரதமிருந்து கோயில் குளமெனவும் வைத்தியசாலைகளிலும் ஏறி இறங்கி ஏங்குபவர்கள் எத்தனையோ பேர்.

அப்படியும் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் குழந்தைப் பாக்கியம் கிடைக்õமல் பலர் ஏங்கும் நிலையில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை கிணற்றிலும் ஆற்றிலும் தள்ளிவிடும் பெற்றோரை என்னவென்று சொல்வது.

அண்மைக்காலமாக குடும்பத்தோடு தற்கொலை முயற்சிகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. நாளுக்கு நாள் அது தொடர்பான சம்பவங்கள் ஊடகங்களில் வெளியாகிக் கொண்டுதான் உள்ளன. கடந்த  17 திகதியில் இருந்து இன்று வரையான 13 நாட்கள் அதாவது அரை மாத கால இடைவெளியில் மாத்திரம் பெற்றோரின் அசட்டுத்தனமான முடிவால் 7 குழந்தைகள் அநியாயமாக தமது உயிரைப் பலிகொடுத்துள்ளார்கள். 

அந்த வரிசையில் முதலாவது சம்பவம் கடந்த 17 ஆம் திகதி வவுனியா தாண்டிக்குளத்தில் இடம்பெற்றது. தாயொருவர் தனது மூன்று பெண் குழந்தைகளை கிணற்றில் தள்ளி வீழ்த்திவிட்டு தானும் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றார். இருந்தும் பிரதேச வாசிகளால் அதிர்ஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால் லதுர்சிகா(6வயது), சன்சிகா (2 1/2வயது), மற்றும் நிதர்சிகா (1 1/2வயது) ஆகிய பெண்குழந்தைகள்  இச்சம்பவத்தில் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். தாயின் மனநிலை சரியின்மை மற்றும் குடும்பத்தின் வறுமை நிலமை என்பனவே இக்கொலைக்கான காரணம் என பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்தன.

இச்சம்பவத்தின் அதிர்ச்சியும் கவலையும் மக்கள் மனதில் இருந்து அகல்வதற்கு முன்னர் அதாவது ஒருவாரத்துக்குள் அது போன்று மற்றுமொரு சம்பவம் கடந்த 23 ஆம் திகதி ஹொரணையில் இடம்பெற்றது. தாயொருவர் பிறந்து நான்கு நாட்களேயான குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். இம்மண்ணில் மலர்ந்து நான்கு நாட்களேயான அந்த மொட்டு பூமியின் மணத்தை நுகர்வதற்குள் கசக்கி எறியப்படுகிறது. 

அதே தினத்தில் மற்றுமொரு சம்பவம் திஸ்ஸமகாராம யுதகண்டிய பிரதேசத்தில் இடம்பெறுகிறது. குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 55 வயதுடைய தந்தையும் 5 வயது மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்கிறார். 

இவ்வாறு அடுத்தடுத்து நடைபெற்ற மூன்று சம்பவங்களைத் தொடர்ந்து நான்காவது சம்பவத்துக்கு மிக நீண்ட நாட்கள் எடுக்கவில்லை. மூன்றாவது சம்பவம் இடம் பெற்ற நாளில் இருந்து சரியாக 6ஆவது நாள் அடுத்த சம்பவமும் இடம் பெறுகிறது. அச்சம்பவம் 27 ஆம் திகதி வாழைச்சேனை மீராவோடையில் பதிவாகின்றது.  தாயொருவர் தனது இரு பெண் குழந்தைகளுடனும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சிக்கின்றார். இச்சம்பவத்தில் இரு குழந்தைகளும் பலியாக தாய்காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார். 



பூஜா(7வயது) மற்றும் மேனுஜா(3 வயது) ஆகிய பெண் குழந்தைகளே சம்பவத்தில் கொல்லப்படுகின்றனர். குடும்பத்தகராறு காரணமாக இந்தப் பெண் பிள்ளைகளுடன் ஆற்றில் குதித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது. 

பொதுவாகப் பார்க்கும் போது நடைபெற்ற எல்லாச் சம்பவங்களும் குடும்பத் தகராறு மனஅழுத்தம் மற்றும் வறுமை ஆகியவை காரணமாக உள்ளன. எந்தப் பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை முயற்சிஎன்பது ஒரு விநாடியில் அல்லது ஒரு சில நிமிடங்களில் எடுக்கும் முடிவல்ல. நீண்டகாலமாககத் திட்டமிட்டு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து எடுக்கப்படுவதேதற்கொலை முயற்சி. அம்முடிவுக்கு வந்தபின் அவர்கள் எதைப் பற்றியும் சிந்திப்பதில்லை.

தற்கொலை முயற்சி என்பது அத்தீர்மானத்துக்கு வருவோருக்கு  சாதாரணமானதாகவே இருக்கும். ஆனால் மரணபயம் என்பது எல்லோருக்கும் இருக்கும். உயிர் ஊசலாடும் அந்த ஓரிரு வினாடிகளில் மரணத்தின் விளிம்பை மனதால் காணும் அந்தக் கணப் பொழுதுகளில் வேண்டாம் இந்த விசப்பரீட்சை என்று சொல்லி எப்படியாவது உயிர் தப்ப வேண்டும் என்று தவிப்பார்கள். பெரியவர்கள் எப்படியாவது சிறிது நேரத்துக்குத் தாக்குப் பிடிப்பார்கள். பிஞ்சு உயிர்கள் எவ்வாறு தாங்கிக் கொள்ளும் அநியாயமாக  உயிரைப் பறிகொடுத்து விடுவார்கள். நடை பெற்ற சம்பவங்களில் தற்கொலை முயற்சியை மேற்கொண்ட பெற்றோர் காப்பாற்றப்பட்டுள்ளார்கள். ஆனால் எந்தப் பாவமும் அறியாத பிஞ்சு உயிர்களே பெற்றோரின் குடும்பப் பிரச்சினைக்கும் வறுமைக்கும் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

தான் மாத்திரம் கிணற்றில் பாய்ந்து இறந்து போவது தற்கொலை. குழந்தைகளுடன் பாய்வது என்பது தற்கொலையல்ல. அது கொலையாகும். தனது உயிரை மாய்த்துக் கொள்வதையே அனுமதிக்காத போது எவ்வாறு அடுத்தவர்களது உயிரைப் பறிக்கலாம்.   

அடுத்தவாரப் பத்தரிகையில் மற்றுமொரு சம்பவம் பதியப்படுவதற்கு முன்னர், இவ்வாறு குழந்தைகளுடன் கிணற்றிலும் ஆற்றிலும் பாயும் சம்பவங்களுக்கு முடிவு கட்டப்பட வேண்டும். முன்னர் குழந்தைகளோடு கிணற்றில் பாய்ந்து தற்கொலை முயற்சியை மேற்கொண்டு காப்பாற்றப்பட்ட தாய்மார்களுக்கு உரிய உளவள ஆலோசனைகளையும் தேவைப்படின் தண்டனைகளையும் வழங்க வேண்டும். இதன் பிறகு எந்தப் பெற்றோரும் இது போன்ற ஒரு முயற்சியை மேற் கொள்ள முடியாதவாறு அந்த செயற்பாடுகள் அமைதல்  வேண்டும். 




தீயினால் தீர்வா?




பஹமுன அஸாம்

மதகுருமார்கள் என்பவர்கள் பற்றுக்களை ஒடுக்கியவர்கள். அதிலும் பௌத்த துறவிகளை நாம் சாதுக்கள் எனவும் அழைக்கின்றோம். சாதுக்கள் எப்போதும் அமைதியானவர்களாக அகிம்சையைப் போதிப்பவர்களாகவே காணப்படுவர். காணப்பட வேண்டும். அவர்கள் சாதாரண மனித உணர்வுகளுக்கு அடிமையாகக் கூடாது. அவ்வாறு அடிமையாகின்றவர்களை துறவிகள் என்று கூற முடியாது.


அமைதியான முறையில் தனது நியாயமான கோரிக்கையை வென்றெடுக்கப் போராடாது தனது மதம் சார்ந்த மிக முக்கியமான பண்டிகை நாளில் அனைவரையும் மனவேதனைக்குள்ளாக்கும்படி பௌத்த துறவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவமானது இன, மத, மொழி பேதமின்றி அனைவரையும் மிகுந்த வேதனையடையச் செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை உலகெங்கிலுமுள்ள பல்லாயிரக்கணக்கான பௌத்த மக்கள் வெசாக் பண்டிகையை கொண்டாடினார்கள்.  கௌதம புத்தர் பிறந்த  மற்றும் அவர் ஞானம் பெற்ற பரிநிர்வாணம் அடைந்த இத் தினத்தை மிகவும் மகிழ்ச்சியாக அவர்கள் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையிலேயே அந்த வேதனைக்குரிய சம்பவமும் இடம்பெற்றது.

பௌத்தர்களின் புனித வழிபாட்டுத் தலமான கண்டியில் அமைந்துள்ள தலதா மாளிகைக்கு முன்னால் இந்த பௌத்த பிக்கு  தனக்குக் தானே தீ மூட்டிக் கொண்ட சம்பவத்தை பலரும் அறிந்திருப்பீர்கள். 


போவத்தை இந்திரரத்ன தேரரே இவ்வாறு தனக்குத் தானே தீ மூட்டித் தற்கொலை செய்து கொண்டார். நாட்டு மக்கள் அனைவரும் வெசாக் வெளிச்சக்கூடுகளைப் பார்க்கச் செல்வதிலும் தானசாலைகளை நடத்துவதிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்த வேளையில் தேரரின் இந்த நடவடிக்கை நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

புத்தரின் புனிததந்தம் வைக்கப்பட்டுள்ள பௌத்தர்களால் புனிதஸ்தலமாக மதிக்கப்படும் கண்டி தலதா மாளிகையின் முன்பாக போவத்தை இந்திரதன என்ற இந்த தேரர் தான் அணிந்திருந்த ஆடையுடன் உடம்பில் பெற்றோலை ஊற்றி தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டார். பலர் இச்சம்பவத்தை பார்த்து திகைத்து நின்ற அதேவேளை சிலர்  புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருக்க  ஒரு சிலர் மாத்திரமே அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடு பட்டனர். இருந்தும் பயனில்லை. அவரது உடம்பில் அதிகமான பகுதிகளை தீ பதம் பார்த்து விட்டது.

அவர் உடனடியாக கண்டி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விடயம் உடனடியாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட போதுஅவரின் பணிப்புரைக்கமைய விசேட வானூர்தி(ஹெலிகொப்டர்)மூலம் மேலதிக சிகிச்சைக்காக கண்டி பொது வைத்திய சாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டார். உடம்பில் எல்லா இடங்களும் தீயில் கருகியதால் கொழும்புக்குக் கொண்டு வரப்படும் போது அவரது உடல் முழுவதும் (பெண்டேச்) கட்டுப் போடப்பட்டிருந்தது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டிருந்த பிக்கு சிகிச்சை பலனின்றி மறுநாள் 25ஆம் திகதி சனிக்கிழமை  உயிரிழந்தார்.



பெல்மதுளை  பிரதேச சபையின் முன்னாள் ஆளும் கட்சி உறுப்பினரான இந்திரரத்ன தேரர் பல கோரிக்கைகளை முன்வைத்த போது அவை கவனத்திற் கொள்ளப்படாததாலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளார். 

இறைச்சிக்காக மாடுகளை அறுப்பதைத் தடை செய்ய வேண்டும்.

சமாதானத்தின் உரிமை மனிதர்களுக்கு மாத்திரமன்றி மிருகங்களுக்கும் இருக்க வேண்டும்.

வற்புறுத்தி மதமாற்றம் மேற்கொள்வதற்கு எதிராக பாராளுமன்றத்தில் சட்டம்  கொண்டுவரப்பட வேண்டும்.

பெரும்பான்மை  இனத்தவர்களின் மதம் சீரழிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

இது பௌத்த நாடு இதற்கேற்ற ஒரு யாப்பு வரையப்பட வேண்டும்.
மதப் போரை ஒழிக்க வேண்டும்.

என்பனவே அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளாகும். தனது கோரிக்கைகளை முன்வைத்து எழுதிய கடிதம் முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இவரது இச்செயற்பாட்டை அவர் முன்வைத்த கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வர மேற்கொண்டாரா அல்லது மக்களின் கவனத்துக்குக் கொண்டுவர மேற்கொண்டாரா என்ற கேள்வி தான் தற்போது எழுந்து நிற்கிறது.

இந்திரரத்ன தேரர்  இதற்கு முன்னரும் பாதயாத்திரை போன்ற பல நடவடிக்கைகளை மேற் கொண்டு ஜனாதிபதியின் (மக்கள்) கவனத்தை தன்பக்கம் திருப்ப முயற்சித்துள்ளார். 

எப்படியோ தன் உயிரைக் கொடுத்து அவர் முன் வைத்த கோரிக்கைகள் கவனத்திற் கொள்ளப்படுமா? அவரது உயிருக்கான மதிப்பு எவ்வளவு என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் போவத்தை இந்திரரத்ன தேரரின் இச்செயற்பாடு மனித மனங்களை வேதனைப்படுத்தியுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

Sunday, May 5, 2013

தங்கத்தின் விலைச்சரிவு நிரந்தரமானதா?


பஹமுன அஸாம்



 தங்கத்திலே குறை இருந்தாலும் அதன் தரத்தினில் என்றுமே குறைவில்லை என்பார்கள். நீரில் போட்டாலும் நெருப்பில் போட்டாலும் தங்கத்தின் தரம் என்றுமே குறைவதில்லை. எக்காலத்திலும் தங்கம் என்றாலே அதற்கு உயர் பெறுமதி உள்ளது. சிறந்த முதலீட்டு ஊடகமாகவும் சேமிப்பு வழியாகவும் கூட தங்கம் காணப்படுகிறது. தங்க நகைகளை அணிவதில் பெண்கள் என்றுமே விருப்பம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறு பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் பாரியளவில் வீழ்ச்சியடைந்தள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த பாரிய வீழ்ச்சியானது பொது மக்கள் மனதில் ஒரு மகிழ்வை எற்படுத்தினாலும் வியாபாரிகளுக்கு இது ஒரு சவாலாக இருக்கக்கூடும். 50 ஆயிரம் ரூபா தொடக்கம் 55ஆயிரம் ரீபா வரை விற்கப்பட்ட 22 கரட் தங்கம் 42 ஆயிரம் ரூபா தொடக்கம் 43 ஆயிரம் ரூபா வரை குறைவடைந்துள்ளது. 

2004 ஆம் ஆண்டுவரை சீராக இருந்து வந்த தங்கத்தின் விலை 2004 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்தே சென்றது. இந்த அதிகரிப்பானது இவ்வருடம் எதிர்பாராத வகையில் வீழ்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. முதல் காலாண்டில் தங்கத்தின் விலை 6 வீதத்தால் குறைவடைந்துள்ளது. 

இவ்வாறு தங்கத்தின் இந்த திடீர் விலை வீழ்ச்சிக்கு பிரதான காரணம் உலக சந்தையில் தங்கத்தின் நிரம்பல் அதிகமானதேயாகும்.  சைப்ரஸ் பொருளாதார வீழ்ச்சி காரணமாக தனது இருப்பில் இருந்த 10 தொன் தங்கத்தை வெளிச் சந்தையில் விற்பனை செய்துள்ளது. இதன் பெறுமதி சு
மார் 400 மில்லியன் யூரோக்களாகும். இந்த 10 தொன் தங்கம் உலக சந்தைக்கு வந்தமையே தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும்.  மேலும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியையும் குறிப்பிடலாம். பங்குச் சந்தை வணிகர்கள் தங்கத்தை கைவிட்டு விட்டு மீண்டும் பங்குப் பத்திரங்களை வாங்க தொடங்கியுள்ளமையும் ஒரு காரணமாகும். 

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலைச்சரிவு இலங்கையில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில் அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் கே.ராதாகிருஷ்ணனைக் கேட்ட போது “தங்கத்துக்கு ஒரு நிலையான விலை இருக்காது. அது அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நாள் குறைந்திருக்கும் மறு நாள் அதிகரிக்கும். அமெரிக்காவின் கையில தான் தங்க வர்த்தகம் தங்கியுள்ளது. விலை குறைஞ்சது கொஞ்சம் சந்தோசம் தான். வியாபாரமும்
முன்னரை விட கொஞ்சம் நல்லாவே இருக்குது. 

அவரிடம் இந்த விலைக்குறைவானது உங்களுக்குப் பாதிப்பில்லையா? என்று கேட்டபோது; பாதிப்பு என்று சொல்வதை விட விலை கூட இருந்த போது நல்ல இலாபத்துக்கு நகைகளை வித்தோம். நல்ல வருமானமும் இருந்தது. நாங்க அவ்வப்போது தங்கத்தை எடுத்து நகை செய்து விக்கிறம். அதால விலைத்தலம்பல் பெரிய பாதிப்பு என்று சொல்ல முடியாது. அண்மையில ஒரு தனியார் வங்கி இந்த விலைச்சரிவு தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்கு  என்னை

அழைத்திருந்தது. அதில இன்றைய நிலவரப்படி ஒரு விலையைக் கேட்டாங்க. நானும் மதிப்பிட்டு 36 ஆயிரம் ரூபா என்று சொன்னன். அந்த வங்கியின் மூலதன விலையின்படி வட்டியோடு 43 ஆயிரம் ரூபா முடியுது. அதன்படி
அவர்களுக்கு 7 ஆயிரம் ரூபா நட்டம். அத்தோட இன்று தங்கம் என்றது நம்ம கலாச்சாரம் ஆகிவிட்டது. ஒரு கலியாணத்தின் போது கட்டாயம் தங்கத்துல தாலி செய்வாங்க. ஏனைய நகைகள் போடுவாங்க. சாதாரண மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம். என்னப் பொறுத்தவரையில இன்னும் விலை குறையவேண்டும் என்று தான் நினைக்கிறன்.’ என்று தனது கருத்துக்களைச் சொன்னார். 

கொழும்பு செட்டியார் தெருவில் உள்ள மற்றுமொரு தங்க நகைக் கடைக்குச் சென்றபோது வரவேற்பும் உபசரிப்பும் தடல்புடலாக இருந்தது. இருப்பினும் நான் நகை வாங்க வரவில்லை என்று சொன்னபோது சற்று முகம் சுழித்த அவர்கள் விடயத்தைச் சொன்னதும் என்னுடன் கதைக்க முன்வந்தார்கள். “தற்போது ஏற்பட்டுள்ள தங்கத்தின் இந்த விலை வீழ்ச்சியால் வியாபாரம் கொஞ்சம் நல்லா போகுது. இருந்தாலும் நாங்க எதிர்பார்த்ததை விட கொஞ்சம் கூடுதலான வீழ்ச்சி என்கிறது கஷ்டமாத்தான் இருக்குது. அடுத்தது வாடிக்கையாளர்கள் இப்ப கொஞ்சம் கூடத் தான் வாராங்க. விலை குறைவு என்றதால மக்கள் முன்ன விட இப்ப அதிகமாக வாங்குறாங்க. இந்த விலைச்சரிவு எதிர்வரும் நாட்களில் எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. 60 ஆயிரத்துக்கு இருந்தது 45 ஆயிரத்துக்கு வந்தது. இது 30 ஆயிரத்துக்குப் போகுமா அல்லது 60 ஆயிரத்துக்கு போகுமா என்று உறுதியா சொல்ல முடியாது. 

அடுத்தது இந்த நகை வியாபரத்தில் என்னைக்குமே ஒரு நிரந்தரமான விலை இருக்காது. ஒரு தளம்பல் எப்போதுமே இருக்கும். ஒரு நாள் கூடும் ஒரு நாள் குறையும். இது வந்து மிகவும் ஒரு இக்கட்டான நிலமையா இருக்கும். ஒரு வாடிக்கையாளர் வந்து அன்று உள்ள விலையின்படி நகை செய்யக் கொடுத்துவிட்டுப் போவார். அவர் ஒரு ஐந்து நாள் கழித்து வரும் போது விலை குறைந்திருந்தால் அவர் அந்த குறைந்த விலைக்கு கேட்பார். விலை கூடியிருந்தால் அது பற்றி ஒண்ணுமே கதைக்க மாட்டார். நாங்க முதல்லயே ஓடர் பண்ணிட்டோம் தானே எங்களுக்கு அந்த விலைக்குத் தான் தர வேண்டும் என்று தர்க்கம் புரிவார்கள்’ என்று பரபரப்பான வியாபார நேரத்திலும் தான் பல வருட அனுபவசாலி என்பதை நிரூபித்துக் காட்டுவது போல தனது கருத்துக்களை எம்முடன் பகிர்ந்து கொண்டார் ஆனந்தன் என்ற தங்க நகை வர்த்தகர்.


செட்டியார் தெருவில் உள்ள மற்றுமொரு நகை கடை உரிமையாளரான கணபதி என்பவரைச் சந்தித்தபோது “என்னைப் பொறுத்தவரையில் தங்கத்தின் இந்த விலைக்குறைவானது பாதிப்பு என்று சொல்வதைவிட அது ஒரு வரப்பிரசாதம் என்று நினைக்கிறேன். வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரையில் முன்னரை விட ஓரளவு கூடுதலாகவே வருகிறார்கள். பவுணுக்கு பத்தாயிரம் வரை விலை குறைந்திருக்கிறது. 5 பவுண்  வாங்கினால் 50000 வரை இலாபம் இருக்கும். எனவே மக்கள் தற்போது நகை வாங்குவதில் கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறார்கள். திருமணத்திற்காக நகை செய்ய நினைத்திருப்பவர்கள் தற்போது செய்து கொள்வார்கள். அதிகமான திருமண நகை ஓடர்கள் வருகிகின்றன.  அதிலும் தற்போது நடுத்தர சாதாரண குடும்ப மக்கள் அதிகமாக வருகிறார்கள். வியாபாரிகள் என்ற வகையில எங்களுக்கும் சந்தோசமாகத்தான் இருக்கிறது. விற்பனை நன்றாக உள்ளது. இந்த விலைமாற்றமானது நிரந்தரமற்றது. திரும்பவும்  விலை அதிகரித்துச் செல்லும் என்று தான் நான் நினைக்கிறேன்.’ என்றார். 

தங்கத்தின் விøல் வீழ்ச்சி தொடர்பாக ஒரு தனியார் வங்கியின் முகாமையாளரான ஷாமிலிடம் கேட்டபோது “இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை இன்னும் நிலையான விலைக்கு வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இன்னும் கூடலாம் அல்லது குறையலாம். அடுத்தது வங்கிகளைப் பொறுத்தவரையில் அடகு வைக்கும் நகைகளுக்கு கொடுக்கும் தொகையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். எமது வங்கி முன்னர் 22 கரட் தங்கத்துக்கு 42 ஆயிரம் ரூபாவை வழங்கியது. ஆனால் அந்தத் தொகை இன்று 35 ஆயிரம் வரை குறைந்துள்ளது. அந்த விதத்தில் 7 ஆயிரம் ரூபாய்வரை கடன் தொகையைக்குறைத்துள்ளோம். 

எமது வங்கியைப் பொறுத்தவரையில் கடந்த  5 அல்லது 6 வருடங்களாகத் தான் அடகுநடவடிக்கையை மேற்கொள்கிறது. ஆனால் நகை அடகு வியாபாரத்தில் முன்னணியில் இருக்கும் வேறு சில வங்கிகள் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலைக்கு முகம் கொடுத்துள்ளன. அடுத்தது இன்றை விலை வீழ்ச்சிக்கு சைப்பிரஸ் ஒரு முக்கிய காரணியாக உள்ளது. சைப்பிரஸ் அரசு தன்னிடம் இருந்த தங்கத்தை சந்தையில் விட்டது போன்று  அமெரிக்க மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளும் தம்மிடம் உள்ள தங்கத்தை சந்தையில் விடக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இருந்தாலும் அதனை உறுதியாகச் சொல்லமுடியாது. அவ்வாறு நடந்தால் தங்கத்தின் விலையில் இன்னும் பாரிய வீழ்ச்சி நிச்சயமாக ஏற்படும்.’ என்று அலுவலக வேலைகளுக்கு மத்தியிலும் தனது கருத்தைச் சொன்னார்.


எது எப்படியோ இந்த விலைச்சரிவானது நிரந்தரமானதா இல்லையா என்பது உறுதியாகச் சொல்ல முடியாத ஒன்றாகவே உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதியளவில் ஏற்பட்ட விலைச்சரிவில் தற்போது படிப்படியான ஒர் ஏற்றத்தையே காணமுடிகிறது. 56 ஆயிரத்தில் இருந்து 44ஆயிரத்து 500 வரை குறைந்தது. ஆனால் இன்றைய நிலவரப்படி 48 ஆயிரமாக காணப்படுகிறது. சில வியாபாரிகளின் கருத்தாக அமைவது  இன்னும் ஒரு சில தினங்களில் மீண்டும் தங்கத்தின் விலை 50 ஆயிரத்தை தாண்டும் என்பதாகும்.

தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணிப்பிடப்படுகிறது.  ஒவ்வொரு நாட்டிலும் அதன் மத்திய வங்கி தங்கத்தை இருப்பில் வைத்திருக்கும். அவ்வாறு இருப்பில் வைத்துள்ள தங்கத்தின் பெறுமதிக்கு ஏற்பவே அந்த நாட்டின் அரசாங்க செலாவணி நாணயம்வெளியிடப்படுகிறது.
சைப்பிரஸ் தன்னிடம் உள்ள முழுத் தங்கத்தையும் விற்பனை செய்யவில்லை. 10 தொன்களை மாத்திரமே சந்தையில் விட்டது. இதன்படி பார்த்தால் தங்கத்தின் விலை வீழ்ச்சியானது நீண்ட நாட்களுக்கு இருக்காது. இருப்பினும் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டுள்ள மேலும் ஒரு சில நாடுகள் தம்மிடம் இருப்பில் உள்ள தங்கத்தை சந்தையில்விடவுள்ளதாக ஒரு கருத்தும் கசிகிறது. இவ்வாறு ஏதேனும் நிகழ்ந்தால் தங்கத்தின் விலை வீழ்ச்சி மேலும் தொடரலாம் என்று உறுதியாக நம்பலாம்.