குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Wednesday, December 25, 2013

தேவயாணிக்காக சங்கீதாவை மறந்துவிட்ட இந்திய அரசு

அஸாம் தாவுஸ்

அமெரிக்காவிலுள்ள இந்தியத் தூதரகத்தில் துணைத்தூதுவராகப் பணியாற்றிய தேவயானி கோபர்கடே கைது செய்யப்பட்ட விவகாரம் இந்தியாவையும் சீற்றமடைய வைத்துள்ளது. விசா மோசடி காரணமாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள தேவாயனி கோபர்கடேவைப் பற்றி ஊடகங்கள் மற்றும் அரச தலைவர்களின்  அனுதாப மற்றும் கோப  அலைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. 

தேவயானி கோபர்கடேவின் கைது பற்றி கவலைப்படுகிறவர்கள் கோபப்படுகின்றவர்கள் அவர் தனக்கு வழங்கப்பட் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்ததை மறந்து போனமைதான் ஏனென்று தெரியவில்லை. ஆனால் எந்தக் குற்றமும் செய்யாத ஒருவர் கைது செய்யப்பட்டது போன்று இந்திய அரசு ஆவேசப்படுவதில் எந்த நியாயமும் இல்லை.

தனது பிள்ளைகளின் முன்னால் கைது செய்தமை , கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றமை, நிர்வாணமாக்கி சோதனையிட்டமை, பெரிய குற்றங்களைச் செய்த கைதிகளுடன் சேர்த்து வைத்திருந்தமை போன்றன அமெரிக்கக் காவல் துறையினரின் அதிகப்படியான செயல்தான்.

இருப்பினும் இந்தக் கருத்துக்களை நியூயோர்க் நகர அரசுதரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா மறுத்துள்ளார். தேவயானி குழந்தைகளின் முன் கைது செய்யப்படவோ அவருக்கு கைவிலங்கிடப்படவோ இல்லை என்றும், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு தொலைபேசியில் உரையாட அனுமதித்திருந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தேவயானி ஒரு தனியறையில் பெண் அதிகாரியொருவரினாலேயே சோதனையிடப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். இத்தனைக்கும் பிரீத் பராரா ஒரு இந்திய வம்சாவழி அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேவயானி மீது முறைப்பாடு செய்தது ஒரு இந்தியப் பெண். அவரைக் கைது செய்ய உத்தரவிட்டது இந்திய வம்சாவழியில் வந்த ஒருவர். எனவே இந்த கைது விடயம் வீட்டுப் பிரச்சினையை ஊர்ப்பஞ்சாயத்துக்குக் கொண்டு  சென்ற ஒரு விடயமே தவிர,  இந்திய அரசு அமெரிக்காவைக் குறை கூறுவதற்கு ஒன்றும் இல்லை.
 தேவயானி ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர். அவர் தனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை தனது சுயநலனுக்காகவே துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த விடயங்கள் தேவயானி வீட்டு வேலைகளுக்காக அழைத்துச் சென்ற சங்கீதா ரிச்சார்ட் மூலம் அம்பலத்துக்கு வந்துள்ளதென்றே கூறலாம். மேலும் இது போன்ற பல சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதில் பிழையேதும் இருக்காது.
தேவயானியைக் கைது செய்தமைக்காக ஆத்திரப்பட்ட இந்திய மக்கள் அதே இந்திய மண்ணில் பிறந்த சங்கீதா ரிச்சார்ட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு அனுதாபப்பட்டதாகத் தெரியவில்லை.

தேவயானியின் வீட்டு வேலைகளைக் கவனிப்பதற்காகவும் அவரின் இரு பெண் குழந்தைகளையும் பார்த்துக் கொள்வதற்காகவும் அழைத்துச் செல்லப்பட்டவர்தான் சங்கீதா ரிச்சார்ட். பொதுவாகவே வெளிநாடுகளில் வீட்டு வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்படும் பெண்கள் துஷ்பிரயோகப்படுத்தப்படுதல், கொலை, சித்ரவதை, சரியான ஊதியம் வழங்காமை என்று பல துன்பங்களைச் சந்திக்க வேண்டிய நிலைமை எல்லா நாடுகளிலும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. அந்தவரிசையில் தான் சங்கீதா ரிச்சார்ட்டும் இந்த வலையில் சிக்கிக் கொண்டுள்ளார். 
 தேவயானியின் வீட்டு வேலைகளுக்காகவும் அவரது இரு பெண் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காகவும் சங்கீதா ரிச்சார்ட்டை தேவயானி நியூயோர்க் அழைத்துச் சென்றுள்ளார்கள். ஒப்பந்தத்தில் வாரத்திற்கு 40 மணிநேர வேலை என்று குறிப்பிடப்பட்டிருந்த போதும் சங்கீதா ஒரு நாளைக்கு 18 மணிநேரம் வரை வீட்டு வேலைகளைச் செய்யப் பணிக்கப்பட்டுள்ளார். அத்தோடு மாதாந்தம் 4500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படுவதாக  ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்த போதும் 473 டொலரே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா ஒரு நாள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்க கடைக்குச் செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய பின் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. நியூயோர்க் மன்ஹாட்டனில் உள்ள ஒரு வழக்கறிஞரை நாடி விடயத்தைச் சொல்லியுள்ளார். அன்றிலிருந்து தான் தேவயானியின் தலையெழுத்து மாற்றியெழுதப்பட்டது.

சங்கீதா வீட்டை விட்டு வெளியேறுவார் என்று தேவயானி ஒருபோதும் எண்ணியிருக்க மாட்டார். சங்கீதா ரிச்சார்ட்டின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தேவயானி பற்றி மோப்பம் பிடிக்க ஆரம்பித்தது. சங்கீதா குட்டையை குழப்பி விட தேவாயனியின்  விசா மோடி விடயமும் அம்பலத்துக்கு வந்தது. அமெரிக்க விசா பெற்றுக் கொள்வதற்காக சங்கீதா பற்றிய பிழையான தகவல்களை வழங்கியுள்ளார் தேவயானி. மேலும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டதை விட குறைவான சம்பளத்தைக் கொடுத்து அமெரிக்க அரசுக்கு பொய்யான கணக்கு காட்டியது பெரிய தவறாகும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.    

கைது செய்யப்பட்ட தேவயானி தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்படி குற்றங்களுக்காக 15 வருடங்கள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும்.

இவ்வாறிருக்க தேவயானி மீதான விசா மோசடி வழக்கை திரும்பப் பெறக் கோரி மனுத்தாக்கள் செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு வழக்கைத் திரும்பப் பெறாவிட்டால் இந்திய. அமெரிக்க உறவில் விரிசல் ஏற்படும் என்று இந்தியா தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மேரி ஹார்ப் வாஷிங்டனில் அளித்த பேட்டியொன்றில் தேவயானி கோபர்கடே மீதான வழக்கு திரும்பப் பெறவோ மன்னிப்புக் கோரவோ மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்  
இந்நிலையில் தேவயானியை ஐ. நா.வின்  இந்திய அரசின் நிரந்தர அதிகாரியாக நியமித்துள்ளது இந்திய அரசு. இதன்மூலம் அவர் துணைத் தூதர் என்ற அந்தஸ்தில் இருந்து தூதரக அதிகாரியாக நியமிக்கப் பட்டுள்ளார். இதனால் அவருக்கு முன்னரை விட அதிகமான சலுகைகளும் பாதுகாப்பும் கிடைப்பதோடு< அவரை எளிதில் கைது செய்யவும் முடியாது.

பணிப்பெண்ணுக்கு எதிராக இந்திய துணைத் தூதர் தேவயானி கோபர்கடே இழைத்த குற்றங்கள் தொடர்பாக பேசுவதை விட்டுவிட்டு, தேவயானி கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டும் இந்திய அரசு மற்றும் ஊடகங்கள் என்று எல்லோரும் பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது. சங்கீதாவும் தன்னாட்டுப் பிரஜை என்பதை இந்திய அரசு மறந்துவிட்டதா அல்லது அதிகாரத்தில் உள்ளவர்கள் தவரிழைத்தால் அது குற்றமிழைத்தால் அது குற்றமில்லையென இந்திய அரசு கருதுகிறதா?




Saturday, December 14, 2013

கொலையில் முற்றுப் பெற்ற காதல் கதை

பஹமுன அஸாம்

திரைப்படங்களைப் பார்ப்பதைப் போன்று குற்றச் செயல்கள் தற்போது சர்வ சாதாரணமான ஒரு விடயமாகப் போயுள்ளன.கொலை கொள்ளை பாலியல் துஷ்பிரயோகம் என்று நேற்றுப் பிரசுரமான செய்தி தவறுதலாக இன்று பிரசுரமாகி விட்டதோ என்று என்னும் அளவுக்கு தினமும் பல்வேறு சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்த வண்ணமே உள்ளன.

அதிலும் காதல் கள்ளத் தொடர்புகளால் ஏற்படும் கொலைகள் அண்மைக் காலத்தில் சற்று அதிகமாகவே பதிவாகியுள்ளன என்றுதான் கூறவேண்டும்.
அந்தவகையில் ஒரு இளம் ஜோடியின் காதல் கதை கடைசியில் காதலனின் கொலையில் முற்றுப் பெற்ற சம்பவம் வாரியபொல மடிகேமிதியாலையில் இடம் பெற்றுள்ளது.

மார்க்கப்பற்று நற்பண்புள்ள ஒரு இளைஞனாக சுற்றித்திருந்தவர் தான்  யூசுப் ஹினாயா உம்மா தம்பதியி ன் கடைக்குட்டியான 18 வயதான  ரிபாத். யார் வம்பு தும்புக்கும் போகாமல் நிறைய நற்பெயரை சம்பாதித்துள்ளார் என்பதை அவரால் ஊரான மிதியாலையில் உள்ள ஒருசிலரோடு கதைத்த  போது தெரியவந்தது.

கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் திகதி,  வடமேல் மாகாணசபைத் தேர்தல் முடிந்து  மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தார்கள்.  மிதியாலையிலும் ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு உணவை சாப்பிட்ட ரிபாத் தனது நண்பர்கள் இருவருடன் அந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ளார். தனது மகன் வெளியே செல்லும் கடைசிப் பயணம் அது என்பதை ரிபாதின் தாயார் அன்று அறிந்திருந்தால் நிச்சயமாக அவரை வெளியே போக விட்டிருக்க மாட்டார்
நண்பர்களோடு கூட்டத்தில் பங்கேற்ற ரிபாத் இரவு 9.30 மணியளவில் வீட்டுக்குத் திரும்பினார். வீடு செல்லும் வழியில் ஒரு கடையில் 2 ஐஸ் கிறீம் கப்களை வாங்கிக் கொண்டார். தனது நண்பர்கள் இருவருடனும் பல கதைகளையும் கதைத்துக் கொண்டு போகும் போது தான் ரிபாதின் கைத் தொலைபேசி அலறியது. தொலைபேசித் திரையில்  தனது காதலியின் பெயரைக் கண்டதும் காதலுக்கு உரித்தான இனம் புரியாத ஒரு சந்தோசம். இருந்தாலும் மறு பக்கத்தில் இருந்து அழைப்பது தனது உயிரைக் பறிக்கப் போகும் எமன் என்பதை ரிபாத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

“நீங்க ரெண்டு போரும் போங்க நான் ஒரு இடத்துக்குப் போய்ட்டு வாரன்ஹ என்று ரிபாத் தன்னுடன் வந்த இரு நண்பர்களிடமும் சொன்ன போது அதை மறுத்த நண்பர்கள் இருவரும் நாங்களும் வருகிறோம்  என்றார்கள். “இல்லை இல்லை நான் அவசரமா போய் வாரான் நீங்க போங்க’ என்று சொல்லி நண்பர்கள் இருவரையும் அனுப்பிவிட்டுத்  தனியாக சென்றார்.

நேரம் பதினொன்று பனினிரேண்டு என்று கடிகாரமுள் ஓடிக் கொண்டிருக்க மகன் ரிபாதை இன்னும் காணவில்லை என்று பெற்றோர் பாதையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். மறுநாள் அதிகாலை 3 மணியையும் தாண்டி விட்டது. ரிபாதை இன்னும் காணவில்லை. அச்சம் கொண்ட பெற்றோர் நாலா பக்கமும் ரிபாதை தேட ஆரம்பித்தார்கள். கடவுள் நம்பிக்கை கொண்ட ரிபாத் அதிகாலை சுபாஹ் தொழுகைக்காக பள்ளிக்கு வருவார் என்று எதிர்பாத்த குடும்பத்தினருக்கு அதிலும் ஏமாற்றம் தான் கிடைத்தது. இருந்தும் ரிபாதை தேடும் பணியில் இருந்து யாரும் ஓயவில்லை. 

காலை 6.30 மணியளவில் ரிபாதின் சகோதரர் ஒருவர் அவர் கற்ற பாடசாலைக்குச் சென்று தேடிப்பார்த்த போது தான் அந்த அதிர்ச்சி காத்திருந்தது. தான் சிறுவயது முதல் படித்த பாடசாலையில்  உள்ள ஒரு கட்டிடத்திற்குள்  ரிபாத் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். தாய்ப்பாசத்தைப் பங்கு போட்டுக் கொண்ட  தனது சகோதரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் காணும் போது யாருக்குத்தான் இதயம் பதறாமல் இருக்கும். கதறியழுத ரிபாதின் அண்ணன் ஓடிச் சென்று தனது சகோதரனின் உடலை மீட்டார். 

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மகனுக்கு என்ன பிரச்சினை. யாருக்கும் தொல்லை கொடுக்காது தன் பாடு தன் வேலை என்று இருக்கும் ரிபாத் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பதற்கு என்ன காரணம். குடும்பத்தார் உட்பட ஊர்மக்களுக்கும் ரிபாதின் மரணம் ஒரு புதிராகவே இருந்தது.

குருநாகல் போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து ரிபாதின் சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் முதுகிலும் இடது கையிலும் அடித்த காயங்கள் காணப்பட்டதாகவும் அதற்கும் மரணத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும். தூக்கில் தொங்கியமையே மரணத்துக்கான காணம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இருப்பினும் பலரது சந்தேகங்களுக்கு மத்தியில் ரிபாதின் சடலம் மண்ணுக்குள் அடங்கிப் போகின்றது. சடலம் அடக்கப்பட்டாலும் அந்த மரணம் தொடர்பிலான சந்தேகங்களும் சர்ச்சைகளும் ஓய்ந்தபாடில்லை. அதற்குக் காரணம் ரிபாதின் மரணத்தில் சில விடயங்கள் ஒன்றுக் கொன்று முரணாகக் கணப்பட்டன.

ரிபாத் வீடு திரும்பும் போது வாங்கிய ஐஸ் கிறீம் கப்கள் இரண்டையும் காணவில்லை. அதை சாப்பிட்டதற்கான அறிகுறிகளும் எங்கும் தென்படவில்லை. அத்தோடு  இரவு கையில் இருந்த ரிபாதின்  இரண்டு கைத் தொலைபேசிகளையும் காணவில்லை. பாடசாலை வளவில் உள்ள கினற்றின் வாளிக் கயிறே பயன்படுத்தப்பட்டிருந்த போதும் அங்கிருந்த வாளியைக் காணவில்லை. மேலும் தூக்கில் தொங்கிய கயிற்றின் முடிச்சு வித்தியாசமாக இருந்ததோடு இரண்டரை அடி உயரத்தில் ஏறி நின்று  தூக்கில் தொங்க எந்த தளபாடத்தையும் பயன்படுத்தியிருக்கவில்லை. மேற்படி விடயங்கள் அனைவரதும் சந்தேகத்தை மேலும் தூண்டிவிட்டன.

சம்பவம் நடந்து ஓரிரு மாதங்கள் சென்றபோது பொலிஸார் விடயத்தில் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை இதனால் ஆத்திரமடைந்த பிரதேச வாசிகள் கடந்த 03 ஆம் திகதி வாரியப்பெல பொலிஸாருக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டார்கள்.  அதன் பலனாக ரிபாதின் கொலை தொடர்பான விசாரணைகள் குளியாப்பிட்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.  

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பியசிறி பெர்னாண்டோ தலைமையிலான குழுவினர் அதிரடியாக களத்தில் இறங்கியதால் குற்றவாளிகளால் நீண்டநாள்  பதுங்கியிருக்க முடியாத நிலை ஏற்பட்டது. ரிபாதின் மரணத்தில் இருந்த சில கேள்விகளுக்கு விடை தேட ஆரம்பித்த பொலிஸார் கடைசியில் ரிபாதின் காதலியின் தந்தை சகோதரன் மற்றும் மாமா ஆகிய மூவரையும் கைது செய்தனர்.  அவர்களிடம் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து ரிபாதின் கொலைக்கான மர்மம் துலங்க ஆரம்பித்தது.

இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்த ரிபாதின் தொலைபேசிக்கு வந்த அழைப்பு ரிபாதின் காதலியிடமிருந்தாகும். அந்த அழைப்புக்கு பின்னர் தனது நண்பர்கள் இருவரையும் போகச் சொல்லிவிட்டு காதலியைக் காண்பதற்காகவே அவர் காதலியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். காதலியின் வீட்டாருக்கு இவர்களது காதல் பிடிக்காததால் ஆரம்பத்தில் இருந்து அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தே வந்துள்ளார்கள்.  வீட்டாருக்குத் தெரியாமல் தனது காதலியின் அறைக்குப் பக்கத்தில் சென்று  யன்னல் ஓரத்தில் நின்று உரையாடிய அந்த இளம் காதல் ஜோடி தாம் சந்தித்துக் கெள்ளும் கடைசி சந்திப்பு  அதுவென்றும் தமது கண்கள் ஒன்றை ஒன்று பாரத்துக் கொள்ளும் கடைசிப் பார்வை அதுதான் என்றும் ரிபாதோ ரிபாதின் காதலியோ அப்போது அறிந்திருக்க மாட்டார்கள்.

இருவரும் கதைத்துக் கொண்டிருக்கும் போது பின்னால் வந்த காதலியின் தந்தையும் சகோதரனும் ரிபாதை  தாக்கியுள்ளார்கள். ரிபாத் மயங்கி கீழே விழுந்துள்ளான். ரிபாத் சுயநினைவுக்கு வராததால்  உடனடியாக செயற்பட ஆரம்பித்த குடும்பத்தினர் விஷயம் வெளியே தெரியாமல் இருக்கவும் தாம் தப்பித்துக் கொள்வதற்கும் உடனடியாக ஒரு திட்டத்தைத் தீட்டுகின்றார்கள்.
இரவோடு இரவாக ஒரு மோட்டார் சைக்கிளில் ரிபாத்தை நடுவில் வைத்துக் கொண்டு பக்கத்தில் இருந்த பாடசாலைக்குக் கொண்டு சென்றார்கள். அங்கிருந்த கிணற்றின் வாளிக் கயிற்றைப் எடுத்து ரிபாதின் களுத்தில் கட்டி தூக்கிவிட்டு திரும்பிச் சென்று விட்டார்கள்.

இத்தோடு தனது மகளின் சகோதரியின் காதலும் முடிந்து விட்டது காதலனும் முடிந்த விட்டான் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டிருப்பார்கள். இருப்பினும் உண்மையை மறைக்க முடியாது. எப்போதாவது  உண்மை வெளியே வரும் அந்தவிதத்தில் தான் மண்னோடு புதைந்து போக இருந்த ரிபாதின் மரணம் தொடர்பான உண்மைகளும் வெளியே வந்து விட்டன. 

அடக்கம் செய்யப்பட்டிருந்த ரிபாதின் சடலம் கடந்த 07 ஆம் திகதி தோண்டி எடுக்கப்ட்டு மேலதி விசாரணைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு அனுப்பபட்டுள்ளது.

எது எப்படியோ சில நொடிகள் யோசிக்காது அவசரப்பட்டுச் சொய்யும் காரியங்களால் பலரது எதிர்கால வாழ்க்கை  வீணாகிப் போகின்றது என்பது தான் உண்மை.