குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Friday, November 4, 2011

உலகின் பலம்வாய்ந்தவர்கள் பட்டியல்

2011ஆம் ஆண்டில் உலகத்தில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். சீனப் பிரதமர் ஹ¥ ஜிந்தாவோ, ரஷ்யப் பிரதமர் விலாடிமீர் புட்டீன் ஆகியோரைப் பின்தள்ளி அமெரிக்க ஜனாதிபதி இப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் போர்பஸ் சஞ்சிகை வெளியிட்டிருக்கும் உலகில் மிகவும் பலம்வாய்ந்தவர்கள் பட்டியலின் 11வது இடத்தை இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி பிடித்திருப்பதுடன், 19வது இடத்தை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பிடித்துள்ளார்.
அல்குவைதா தலைவர் ஒசாமா பின்லேடன் மற்றும் லிபியாவின் முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி ஆகியோர் கொல்லப்பட்டதன் பின்னர் ஒபாமாவுக்கான ஆதரவு அதிகரித்திருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மிகவும் சக்தி மிக்க பெண்மணிகள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த ஜேர்மனின் தலைவர் அஞ்செலா மேர்கல் சக்தி மிக்க தலைவர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ரஷ்யாவின் பிரதமர் விலாடிமிர் புட்டின் காணப்படுவதுடன், மூன்றாவது இடத்தில் சீனப் பிரதமர் ஜிந்தாவோ காணப்படுகிறார்.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில்கேட்ஸ் இப்பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளதுடன், பேஸ்புக் எனும் சமூக வலைப்பின்னலின் தலைவரான மார்க் சக்கபேர்க் 9வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கிறீன்விச் நேரம் மாறப்போகின்றது


சர்வதேச நேரக் கணிப்பீடாக கடந்த 120 ஆண்டுகளாக இருந்துவரும் கிறீன்விச் நேரக்கணக்கு குறித்து மாற்றம் ஒன்றை கொண்டு வரக்கூடிய பிரேரரண பற்றி விவாதிக்க உலகின் முன்னணி விஞ்ஞானிகள் பிரித்தானியாவில் ஒன்று கூடுகின்றனர். இம்மாநாட்டின் முடிவு கிறீன்விச் நேரக்கணக்கு வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பாக போய்விடும் என்று கருதப்படுகின்றது.

120 வருடங்களாக சர்வதேச நேரக்கணக்கீடாக கிறீன்விச் நேரம் மதிக்கப்பட்டு வருகின்றது. கிறீன்விச் நேரக்கணக்கீடு பூமியின் சுழற்சியைக் கொண்டு கணக்கிடப்படவில்லை என்றும் அதன் கணக்கீடு அணுச்சக்தி மணிக்கூடுகளைக் கொண்டே கிறின்விச் நேரம் கணக்கிடப்படுவதாகவும் புதிய கருத்து உருவாகியுள்ளது.

அதனால் கிறீன்விச் நேரக்கணக்கிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரித்தானியாவின் எதிர்ப்புக்கு மத்தியிலும் கிறீன்விச் நேரத்திற்கு பதிலாக புதிய நடவடிக்கையை எடுப்பது பற்றி ஜனவரியில் கூடி முடிவு செய்வதற்காக சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் ஜெனிவாவில் கூட இருக்கின்றது. கிறீன்விச் நேரத்திற்கு பதிலாக புதிய நேரத்திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்று பிரான்ஸ் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

வைத்தியர் நோயைக் கண்டுபிடிப்பது எப்படி?


ஒரு வைத்தியரிடம் நீங்கள் செல்லும் அடிப்படையில் அவர் முதலில் உங்களோடு உரையாடுவார், பின்பு உங்களை சோதித்துப் பார்ப்பார்,பின்பு சில மருத்துவச் சோதனைகள் செய்யும் படி கேட்பார், பின்பு உங்களுக்குரிய மருந்துகளை கொடுப்பார்.

என்ன அடிப்படையில் மருத்துவர் உங்கள் நோயை இனங்காண்கிறார் என்பதைப்பற்றி ஒரு அடிப்படை அறிவைத் தருவதற்காகவே இந்தப் பதிவு.

முதலில் உங்களோடு உரையாடும் போது வைத்தியர் உங்கள் நோயின் அறிகுறிகளை மனதிலே குறித்துக் கொள்வார். அந்த அறிகுறிகளின் அடிப்படையில் உங்களுக்கு இருக்கக் கூடிய சாத்தியமான நோய்களை மனதிலே பட்டியல் இட்டுக் கொள்வார்.

இந்தப் பட்டியலில் உள்ள நோய்களில் உள்ள நோய்களின் போது உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். உங்களைச் சோதிக்கும் போது அப்படி ஏதாவது அவர் பட்டியல் இட்ட நோய்களுக்குரிய அடையாளங்கள் உள்ளதா என்று அவதானிப்பார். இப்போது உங்களுக்குத் சாத்தியமான நோய்களின் பட்டியல் சிறிதாகிவிடும். அதாவது நீங்கள் சொன்ன அறிகுறிகளை வைத்து அவர் மனதிலே உருவாகியஅந்த பட்டியல் உங்களை சோதித்த பின்பு இன்னும் சிறிதாகி இப்போது உங்களுக்கு சாத்தியமான ஒரு சில நோய்களில் உங்களுக்கு உண்மையில் என்ன நோய் இருக்கினறது என்று உறுதிப் படுத்திக் கொள்ள அவருக்கு குறிப்பிட்ட மருத்துவச் சோதனைகள் தேவைப்படலாம்.


உதாரணமாக இரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனை , எக்ஸ்ரே பரிசோதனை போன்றவை.சில நோய்கள் வெறுமனே உங்கள் அறிகுறிகள் மற்றும் வைத்திய உங்களைச் சோதிக்கும் போது காணும் அடையாளங்களை வைத்தே அறியப் பட்டு விடலாம்.அந்த நேரத்தில் எந்த விதமான மருத்துவப் பரிசோதனைகளும் இல்லாமலேயே உங்களுக்கு மருந்து வழங்கப் படலாம்.

இறுதியாக உங்கள் நோய் நிச்சயமாக உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, உங்கள் வயது, பால், பொருளாதார நிலைக்கு ஏற்ப உங்களுக்குரிய மருந்துகளை வழங்குவார்.


அதாவது ஒரே நோய்க்கு பல விதமான மருந்துகள் இருக்கின்றன , சில சிருவர்கலிலே பாவிக்க முடியாது, சில கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்க முடியாது , சில மருந்துகள் விலை உயர்ந்தவை எல்லோருக்கும் கொடுக்க முடியாது, சில பாலூட்டம் கொடுக்கும் அன்னையருக்கு கொடுக்க முடியாது, இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டே வைத்தியர் ஒருவருக்குரிய மாத்திரைகளை நிர்ணயிப்பார்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் ஒட்டகப் பால்


அரபு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ஒருவகை மருந்தை தயாரித்துள்ளனர். இந்த மருந்து புற்று நோயை குணமாக்கும் தன்மை உடையது என் தெரியவருகிறது. விஞ்ஞானிகள் எலிக்கு புற்றுநோயை உருவாக்கி இந்த மருந்தை 6 மாதகாலமாக எலிக்கு செலுத்தி வந்தனர். எலியின் உடலில் இருந்த புற்றுநோய்க் கலங்கள் அகன்று வீரியத்துடன் கூடிய புதிய கலங்கள் உருவாகின. இதில் எலிக்கு புற்றுநோய் முற்றிலும் குணமாகிவிட்டது.

ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் இந்த மருந்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது புற்றுநோய் கலங்களை அழித்துவிட்டு புதிய கலங்களை உருவாக்குகிறது. இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவது இல்லை. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தை பயன்படுத்தி புற்றுநோயை சரியாக்கி விடலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இதற்காக அடுத்த கட்டமாக மனிதர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி ஆய்வுசெய்ய இருக்கிறார்கள்.

Wednesday, November 2, 2011

வேலாயுதம்









மீண்டும் ஒரு விஜய் படம். காமெடி, காதல், தங்கச்சி பாசம், அவ்வப்போது சென்டிமெண்ட், கிடைத்த இடைவெளிகளிலெல்லாம் பஞ்ச் வசனங்கள், சுயபுராணம், லாஜிக்குக்கு சம்பந்தமே இல்லாத ஆக்ஷன் என பக்கா விஜய் படம்.

 ஆனால் வேட்டைக்காரன், சுறா மாதிரி சோதிக்காமல் ரசிக்கும்படி காட்சிகளை அமைத்ததில், இயக்குநர் ஜெயம் ராஜா விஜய்யோடு சேர்ந்து ஜெயித்திருக்கிறார்!
 பத்தாண்டுகளுக்கு முன்பு திருப்பதிசாமி எழுதி இயக்கிய ஆசாத் படத்தின் தழுவல் இந்தப் படம் (அதற்கும் முன்பு அமிதாப் நடித்த ஒரு இந்திப் படத்திலிருந்துதான் திருப்பதிசாமி உருவியிருந்தார்!).

ஒரு நிருபரின் கற்பனைப் பாத்திரம், தற்செயலாக உயிர்பெற்றால் எப்படி இருக்கும் என்ற சுவாரஸ்ய கேள்வியின் விளைவு, வேலாயுதம்!

ஜெனிலியா ஒரு சேனல் நிருபர். உயர்மட்ட ஊழல்களை அம்பலப்படுத்த முனைகிறார், தனது ஸ்டிங் ஆபரேஷன் மூலம். அமைச்சர் ஒருவர் தொடர்பான வெடிகுண்டு சதியை, அவரது தொடர்பு இருப்பது அறியாமல் நண்பர்களுடன் ஜெனிலியா ஆராய முனைய, அதில் நண்பர்கள் கொல்லப்படுகிறார்கள்.

கத்திக் குத்தோடு ஜெனிலியா தப்பிக்கிறார். அப்போது சென்னையில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிக்கப் போகும் அபாயம் அவருக்கு தெரிய வருகிறது, தன்னைத் தாக்கிய ரவுடிகள் மூலம்.

எதிர்பாராத விதமாக அந்த ரவுடிகள் ஒரு விபத்தில் எரிந்து போகின்றனர். அப்போதுதான் கற்பனையாக வேலாயுதம் என்ற பாத்திரத்தை அவர் உருவாக்குகிறார். இந்த ரவுடிகளைக் களையெடுத்தது வேலாயுதம்தான் என்று பரப்பிவிடுகிறார் ஜெனிலியா.

ஒவ்வொரு விபத்து நேரும் முன்னும் மக்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். காரணம் வேலாயுதம் என்று ஜெனிலியா பரப்ப ஆரம்பிக்க, வேலாயுதம் பெயரை நெஞ்சில் பச்சைக் குத்தும் அளவுக்குப் போகிறார்கள் மக்கள்.

யதேச்சையாக நடக்கும் இந்த விஷயங்களின் போதெல்லாம், யதேச்சையாகவே சம்பந்தப்படுகிறார் ஒருவர். அவர் பெயரும் வேலாயுதம்தான்… நம்ம ஹீரோ பால்கார விஜய். சிட்பண்டில் போட்ட பணத்தை தங்கை திருமணத்துக்காக எடுக்க கிராமத்திலிருந்து சென்னை வரும் அவர், தனக்கே தெரியாமல் ஒவ்வொரு முறையும் குண்டு வெடிப்பிலிருந்து மக்களைக் காக்கிறார்.

சூழ்நிலை, அவரையும் ஜெனிலியாவையும் சந்திக்க வைக்கிறது. தான்தான் மக்களைக் காப்பாற்றினோம் என்பதே தெரியாமல், யாருங்க அந்த வேலாயுதம் என ஒருமுறை ஜெனிலியாவை இவர் கேட்க, ‘அது நீங்கதான்’ என ஜெனிலியா கூற, ஷாக் அடித்து நிற்கிறார் விஜய். ஆனாலும் இதெல்லாம் வேலைக்காகாது ஆளை விடுங்கள் என கிராமத்துக்கு போகும் விஜய், பின்னர் பொங்கியெழுந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றும் சூப்பர் ஹீரோவாகிறார்.

அது எப்படி, ஏன் என்பது நீங்கள் திரையில் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான முடிச்சுகள்!


ஜனரஞ்சகப் படங்கள் என்றால் நம்ப முடியாத காட்சிகள் இருந்தே தீர வேண்டும் என்பது நமது ஹீரோக்களும் இயக்குநர்களும் மனதில் வரித்துக் கொண்ட விஷயங்கள். அதற்கு சரியான உதாரணம் வேலாயுதம் படத்தின் இறுதியில் விஜய் ரயிலை நிறுத்தும் அந்தக் காட்சி. சான்ஸே இல்லை… இது அசல் ஆந்திரத்து இறக்குமதி என கட்டியம் கூற இது ஒன்று போதும்!

வழக்கமான மசாலா படம்தான் என்றாலும், காட்சிகளில் அதை சுவாரஸ்யப்படுத்தியிருப்பதில் ரீமேக் ஸ்பெஷலிஸ்ட் ராஜா, தனித்துத் தெரிகிறார்.

சாதாரணமாகவே காமெடியில் புகுந்து விளையாடுவார் விஜய். உடன் சந்தானம் வேறு சேர்ந்தால் கேட்கவா வேண்டும். ரகளை பண்ணுகிறார்கள்.

அதுவும் உடைமாற்றும் அறையில் ஜெனிலியாவை ‘முன்னே’ பார்த்துவிடும் விஜய், சண்டைக் கோழியாக சிலுப்பிக் கொண்டு நிற்கும் ஜெனிலியாவிடம் வேணும்னா நீயும் பார்த்துக்க என தன் முன்பக்கத்தைக் காட்ட, அதற்கு சந்தானம் அடிக்கும் கமெண்ட் அக்மார்க் கவுண்டர் குறும்பு. அரங்கம் சிரிப்பில் வெடிக்கிறது!


தங்கையோடு அவர் பாசமலர் படம் பார்க்கும் காட்சி, இன்னொரு டைமிங் காமெடி வெடி!

முதல்பாதி எப்படி போகிறதென்றே தெரியவில்லை. அத்தனை பரபர வேகம். கலகலப்பான காட்சிகள். ஆனால் பின் பாதியில் ஏக ஆக்ஷன், தேவையற்ற பஞ்ச்கள், அல்லக்கைகள் உசுப்பேத்தும் காட்சிகள் என ஸ்பீட் பிரேக்கர்கள் அதிகம்.

அதிலும் கடைசி காட்சியில் விஜய் வெற்றுடம்போடு வந்து போகிறார். இந்தக் காட்சியின் அவசியத்தை இயக்குநர்தான் விளக்க வேண்டும். அரசியல் ஆசை உள்ளுக்குள் இருந்தாலும், இப்போதைக்கு வெளியில் காட்டினால் ஆபத்து என விஜய்யின் உள்மனது சொல்வது, வசனங்களில் பிரதிபலிக்கிறது!


விஜய்யின் நடிப்பில் வழக்கத்தை விட கூடுதல் துள்ளல். வசன உச்சரிப்பு கூட இதில் வித்தியாசமாக உள்ளது. வரவேற்கத் தக்க மாறுதல்தான்!


இன்னும் ஓரிரு காட்சிகள் அதிகமாக வந்திருந்தால் கூட, ஹீரோ சந்தானமாப்பா என்று கேட்டிருப்பார்கள். மனிதர் அப்படி போட்டுத் தாக்குகிறார்.

ஒரு டெலிவிஷன் பத்திரிகையாளராக ஜெனிலியா ஓகேதான். அவரும் விஜய்யும் மோதிக் கொள்ளும் காட்சிகளில் அத்தனை இயல்பு.

ஹன்ஸிகா மோத்வானிக்கு கொடுத்த வேலை ரசிகர்களுக்கு மயக்க மருந்து அடிப்பது. அதற்கு தனது உடல் அழகை கச்சிதமாக உபயோகித்திருக்கிறார்.

தங்கை சரண்யா மோகன் வரும் காட்சிகள் திருப்பாச்சியை நினைவுபடுத்துகின்றன. எம்எஸ் பாஸ்கர், பரோட்டா சூரி, பாண்டி என அனைவரும் தங்கள் பங்கை சரியாகவே செய்துள்ளனர்.

ப்ரியனின் ஒளிப்பதிவும், விஜய் ஆன்டனியின் இசையும் இயக்குநருக்கு மிகவும் கை கொடுத்துள்ளன. ஆனால் அந்த சொன்னா புரியாது பாடலை மட்டும் வேறு பாடகரை பாட வைத்திருக்கலாம்.

கடைசி பத்து நிமிடம் வழக்கம் போல விஜய் பேசிக் கொண்டே போகிறார். இந்த மாதிரி காட்சிகள்தான் அவர் மீது மற்ற ரசிகர்களுக்கு கடுப்பை வரவழைப்பவை.

மற்றபடி இரண்டாம் பாதியில் ஆக்ஷன் காட்சிகளைக் குறைத்து, இரண்டு பாடல்களை வெட்டி, நறுக்குத் தெரித்த மாதிரி வசனங்களை வைத்திருந்தால், விஜய் படங்களில் வித்தியாசமானதாக வந்திருக்கும் வேலாயுதம்.

எது எப்படிப் போனாலும் இந்த வேலாயும் படம் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு ஆப்பு வைப்பதாகவே உள்ளது. தமிழ் சினிமா எப்போதும் முஸ்லிம் மக்களை தீவிரவாதிகளாகவே காட்டுகிறது. இந்த வேலாயுதம் மட்டுமல்ல இதற்கு முன்னர் வந்த எத்தனையோ படங்கள் இந்தமாரியாக தமிழ் முஸ்லிம்களிடையே பகையை தூண்டுவதாய் இருக்கிறது.

ஆனாலும் எடுத்த வரை, நல்ல பொழுதுபோக்குப் படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறார்கள் விஜய்யும் ராஜாவும்!