குருடியை மனைவியாகவும், செவிடனை நண்பனாகவும், ஊமையை வேலைக்காரனாகவும், நொண்டியை நிர்வாகியாகவும், நோயாளியை பகைவனாகவும் பெற்றவன் நிம்மதியான மனிதன். - !

Sunday, March 17, 2013

உயர்குடிக்கும் விளையாட்டுப் போட்டிகள்


(பஹமுன அஸாம்)


விளையாட்டுப் போட்டிகள் என்றாலே மாணவர்களுக்குக் கொண்டாட்டம் தான். ஓரிரு பாடங்களுக்குப் பிறகு மைதானத்துக்கு ஓடி விடுவர்கள். உற்சாகத்தோடு விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள். இது கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இருந்த நிலை. ஆனால் இந்த நிலை இன்று மாறியுள்ளது.


பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டி என்றாலே பயந்து விலகி ஓடுமளவுக்கு மாணவர்களின் மன நிலை மாறிவிட்டது. சுமார் ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று பாடசாலை மாணவிகளும் ஒரு மாணவனும் போட்டியில் ஈடுபட்டிருக்கும் போது உயிரிழந்தமையே இதற்குக் காரணமாகும்.

கடந்த ஜனவரி 28ஆம் திகதி பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பலியான முதலாவது உயிர் என்ற பதிவு மன்னார் கோயில்குளத்தைச் சேர்ந்த டிலோஜனுடையதாகும். மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரி (தேசிய பாடசாலையில்) 12ஆம் ஆண்டில் பயின்ற டிலோஜன் மிகுந்த உற்சாகத்துடன் சைக்கிள் ஓட்டப் போட்டியில் கலந்து கொள்கிறான். ஆனால் அந்த உற்சாகத்தோடு அவனால் வெற்றிக் கோட்டைத் தொட முடியாமல் போகிறது. இடை நடுவில் வாந்தியெடுத்து விழுகிறார். வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதும் டிலோஜனது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போகிறது.

இரண்டாவதாக ஜனவரி 31ஆம் திகதி கௌஷல்யா பவித்ராணி என்ற மாணவிக்கு நேர்ந்த கதி பலரது உள்ளங்களைவிட்டு இன்னும் மறைந்திருக்காது. சிலாபம் ஆனந்தா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற மாணவி கௌஷல்யா பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் மரதன் ஓட்டப் போட்டியில் இடைநடுவில் பாதையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் சிலாபம் வாழ்மக்களை மட்டுமன்றி நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. 

இந்த மாணவியின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குமுன் மற்றுமொரு மாணவியும் விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கும் போது உயிரிழந்தாக பெப்ரவரி 18ஆம் திகதி மொறட்டுவப் பிரதேசத்தில் இருந்து ஒரு செய்தி வெளியானது. ஞானேஷ்வர பௌத்த வித்தியாலயத்தில் எட்டாம் தரத்தில் கல்வி பயின்ற அஞ்சலி இசுரிகா என்ற மாணவியே அவ்வாறு தனது உயிரை அநியாயமாக துறந்தவர். இச்செய்தியைக் கேள்விப்பட்டவுடன் அப்பாடசாலை மாணவிகள் மாத்திரமல்ல ஏனைய பாடசலை மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களது உள்ளத்திலும் ஒருவித பயம் குடிகொண்டுவிட்டது. விளையாட்டுப் போட்டிகளை மேற்கொண்டு நடத்துவதற்குத் தயங்குகிறார்கள்.

இந்நிலையில் ஒரு வாரத்துக்குப் பின்னர் மற்றும் ஒரு செய்தி கடந்த பெப்ரவரி 26ஆம் திகதி அரநாயக்க ரிவிசந்த தேசியப் பாடசாலையில் இருந்து பதிவாகிறது. பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியின் போது இவ்வருடத்தில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் தனது பெயரை நான்காவதாக பதித்துவிடுகிறார் ஹஷினி அனுஷா குமாரி என்ற மாணவி. 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கு பற்றிய அவரால் 300 மீற்றர் தூரத்தை மட்டுமே ஓட முடிந்தது. இடைநடுவில் கீழேவிழுந்தவர் தன் உயிரையும் இழந்துவிடுகிறார்.

இவ்வாறு ஜனவரி 28ஆம் திகதி தொடக்கம் பெப்ரவரி 26 ஆம் திகதி வரையான சுமார் ஒரு மாதகால இடைவெளியில் நான்கு மாணவர்கள் பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியில் பங்கு பற்றிய வேளையில் உயிரிழந்துள்ளார்கள். இச்சம்பவங்களைத் தொடர்ந்து ஏனைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித அச்சமான சூழ்நிலையே காணப்படுகிறது. திறமையாக விளையாடக்கூடிய மாணவர்களும் பயம் காரணமாக போட்டியில் பங்கு பற்றத் தயங்குகிறார்கள். பின்வாங்குகிறார்கள். மறு பக்கம் அதிபர் ஆசிரியர்களும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தயங்குகிறார்கள். 

இவற்றுக்கான காரணங்களை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற முன்னர் போட்டிகளில் பங்குபற்றும் சகல மாணவர்களுக்கும் வைத்தியப் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஜனாதிபதியே நேரடியாகத் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளார்.  இச்செயற்திட்டத்தை பாரபட்சமின்றி சகல பாடசாலைகளிலும் மேற்கொள்ள வேண்டும். இன்னொரு பாடசாலையில் இது போன்றதொரு சம்பவம் இனியும் நடக்கக்கூடாது என மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான உயிரிழப்புக்கள் ஏற்படுவது இவைதான் ஆரம்பமல்ல. சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் ஹோமாகம கல்வி வலயத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நடந்துள்ளது. போட்டியை முடித்து வெற்றிக் கோட்டில் விழுந்த மாணவனின் வாய் மற்றும் மூக்கால் நுரை கக்கி இறந்திருக்கின்றார். பதிவுகளின்படி இதுதான் விளையாட்டுப் போட்டியின் போது ஒரு மாணவன் உயிரிழந்த முதலாவது சம்பவமாக கருதப்படுகிறது. அதற்கு முன்னர் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக பதிவுகள் இல்லை. அச்சம்பவத்தின் பின்னர் அவ்வப்போது பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. குத்துச்சண்டை, கராத்தே போன்ற போட்டிகளின் போதான உயிரிழப்புக்களே அதிகமாக இடம் பெறுகின்றன. 

பாடசாலை மாணவர்களின் போசாக்கு, தேகாரோக்கியத்தில் பெற்றோர் அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும். தற்காலத்தில் சுமார் 50 வீதமான மாணவர்கள் காலை உணவு உட்கொள்ளாமலேயே பாடசாலைக்குச் செல்கிறார்கள். விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போதும் மாணவர்கள் இவ்வாறுதான் காணப்படுவார்கள். கடையில் உள்ள துரித உணவுகளைச் சாப்பிட்டு வயிற்றை நிறப்பிக் கொள்வார்கள். இதனால் அவர்களுக்குத் போதியளவு சத்துக்கள் கிடைப்பதில்லை. 

சாதாரணமாக பாடசாலையில் தினமும் கலையில் நடக்கும் சுமார் ஐந்து நிமிட ஒன்று கூடலின் போதே ஓரிரு மாணர்கள் மயங்கி விழுந்து விடுவார்கள். ஓட்டப் பந்தயங்களின்போது ஏற்படும் அதிக களைப்புக்கு இவர்கள் எவ்வாறு ஈடுகொடுப்பார்கள். மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பிரதான காரணியாகவே இருக்கின்றது.  எப்படியே விளையாட்டுப் போட்டிகளின்போது இடம்பெறும் உயிரிழப்புக்கள் தொடருமேயானால் எதிர்காலத்தில் இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கங்களையும் சர்வதேச வெற்றிகளையும் பெற்றுத் தரக்கூடிய வீரர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்பது மட்டும் உறுதி.

Friday, March 15, 2013

மகளிர் தினத்தில் மனம்திறக்கும் பெண்மணிகள்


(பஹமுன அஸாம்)
asam.mtm@gmail.com

இன்று மார்ச் 8ஆம் திகதி சர்வதேச மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான பல முன்னேற்பாடுகள் இடம்பெற்றுவருவதனையும் எம்மால் அறிய முடிகிறது. வருடாந்தம் இத்தினத்தில் மிகவும் உற்சாகமாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டாலும் அதனால் பெண்கள் சமுதாயத்திற்கு எந்தளவில் பயன்கள் கிடைத்தன? அவர்களின் எத்தனை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டன? போன்ற விடயங்கள் இன்னமும் கேள்விக்குறியாகவே உள்ளன.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சமூகத்தின் பல்வேறு மட்டத்திலும் உள்ள சில சகோதரிகள் கூறிய கருத்துக்களை இங்கு தருகிறோம்.

கோமளேஷ்வரி செல்வகுமார், யாழ்ப்பாணம். (ஆட்டோ ஓட்டுனர்)


நான் கோமளேஷ்வரி செல்வகுமார். நான் யாழ்ப்பாணத்தில வெள்ளாந்தெருவில இருக்கிறன். நான் ஆட்டோ ஓட்டித் தான் குடும்பத்த கொண்டு நடத்துறன். எனக்கு ஐந்து  பிள்ளகள். கணவன் நோய்வாய்ப்படடிருக்கிறார். அதனால் அவர் தொழிலுக்குப் போறதில்ல. நான் ஆட்டோ ஓட்டி கிடைக்கிற வருமானத்தாலதான் குடும்பத்துக்கான எல்லா செலவுகளையும் சமாளிக்கிறன். பெண்களப் பொறுத்தவரையில இண்டைக்கு சும்மா வீட்டுக்குள்ள முடங்கிக் கிடக்கிறதைவிட எங்களால் செய்யக்கூடிய இப்படியான சுயதொழில்களைச் செய்யிறது பிரயோசனமானது.

அதிகமான பெண்கள் கோழி, ஆடு, மாடு வளர்க்கிறதையும் தையல் வேலையையும்  தான் செய்யுறாங்க. இவற்றால வருமானத்தப் பெற்றுக் கொள்ள நீண்ட நாட்கள் காத்துக் கொண்டு இருக்க வேணும். ஆனா ஆட்டோ ஓடுறதால உடனுக்குடனே வருமானம் வருது. அதனால தான்  நான் மத்த பெண்களுக்கும் சொல்லுறன். எதையும் எங்களால முடியாது கஷ்டம் என்று நினைக்காமல் நம்பிக்கையோடு செய்தால் எங்களாலும் சாதிக்கலாம்.

அடுத்தது மகளிர் தினத்தில மட்டும் தான் பெண்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுகினம். ஏனைய நாட்களில அது பற்றி பேசவும் மாட்டாங்க தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவும் மாட்டாங்க. எனவே இந்த ஒரு நாளைக்கு மட்டும் மகளிர் தினத்தை மட்டுப் படுத்தாம எப்போது தேவை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் பெண்கள் தமது உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளுறன்

ஆர்த்திகா பாலச்சந்திரன், கொழும்பு (பல்கலைக்கழக மாணவி)

நான் ஆர்த்திகா பாலச்சந்திரன். கொழும்புப் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் மூன்றாம் ஆண்டில் படிக்கிறன். மகளிர் தினம் என்பது இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் கட்டாயம் தேவையான ஒன்று தான். ஏனென்றால் ஆரம்ப காலத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகவே கணப்பட்டன. அந்த நிலமை இன்று படிப்படியாக குறைவடைந்துள்ளது என்று சொல்லலாம். இப்படி ஒரு தினத்தைப் பிரகடனப்படுத்தி. பெண்களின் நிலைமைகள் பற்றி பேசப்படுவதால் அவர்களின் நிலை வெளியுலகத்துக்குத் தெரியவருகிறது. இதனால பெண்களின் நிலைப்பாட்டை அனைவரும் அறிந்து கொள்வார்கள்.

பெண்களுக்கான பாதுகாப்பு பற்றிக் கூறுவதாக இருந்தால் அவர்களுக்கு இன்னும் பூரண பாதுகாப்பு இல்லை என்றே கூறவேண்டும். உதாரணமாக தினசரிப்பத்திரிகையொன்றை எடுத்துக் கொண்டால் ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறை பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக ஏதாவது ஒரு செய்தி இருக்கும். எனவே இந்த நிலைமை மாறும் வரை பெண்களுக்கு பூரண சுதந்திரம் பாதுகாப்பு உள்ளது என்று என்னால் கூறமுடியாது.

அடுத்தது பெண்களைத் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும். இதை விட்டு சாதாரணமாக ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் சிறையில் அடைத்துவிட்டு விடுதலை செய்வதையோ, அபராதமாக ஒரு தொகைப் பணத்தைக் கட்டி சுதந்திரமாக நடமாடவோ விடக்கூடாது. அவ்வாறு செய்வதால தப்பு செய்பவர்கள் தொடர்ந்து அவற்றை செய்துகொண்டே இருப்பார்கள். 

புஷ்பராணி, பதுளை. (தனியார் நிறுவன செயலாளர், கணக்காளர்)

நான் புஷ்பராணி. எனது சொந்த இடம் பதுளை. ஒரு தனியார் நிறுவனம் செயலாளராகவும் கணக்காளராகவும் இருக்கிறன். எமது நிறுவனத்தால தோட்ட மற்றும் கிராமப்புற இளைஞர் யுவதிகளுக்கு  சுயதொழிலுக்கான வேலைத்திட்டங்கள் மற்றும் அறிவூட்டல் கருத்தரங்குகளை நடத்துவதோடு  சிறுவர்களுக்கான முன்பள்ளியையும் நடத்துகிறது. 

மகளிர் தினம் என்பது ஒரு முக்கியமான தினமாகும். எமது நிறுவனத்தாலும்  ஒவ்வொரு வருடமும் பதுளைப் பிரதேசத்தில் மகளிர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம்.   பெண்களைப் பொறுத்தவரையில் பல பிரச்சினைகள் கோரிக்கைகள் அவர்களுக்கு இருக்கின்றன. நாம் அவற்றை இனங்கண்டு உரியவர்களிடம் முன்வைக்கின்றோம். ஆனாலும் எங்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் எல்லாம் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.  மகளிர் தினம் என்பது உண்மையில் நன்மை பயக்கக்கூடியதாகத்தான் இருக்கின்றது. இருந்தாலும் அதனால் நாம் எதிர்பார்க்கும் பலன்கள் கிடைப்பதில்லை.

பதுளைப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளது என்று சொல்ல முடியாது. இன்று அதிகமான இடங்களில் பெண்கள் வேலை செய்கிறார்கள். தமக்கென்று ஒரு வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். பதுளையிலும் ஒரு சில கடைகளைத் தவிர அநேகமான இடங்களிலும் பெண்கள் தான் வேலை செய்கிறார்கள். இது உண்மையில் பெருமைக்குரிய விடயம் தான். ஆனால் இவர்களில் ஒரு சிலரை சில முதலாளிமார் தப்பான கண்ணோடு பார்ப்பதும் அவர்களின் உழைப்புக்கு ஏற்ற சம்பளத்தைக் கொடுக்காது விடுவதும் கவலைக்குரிய விடயங்கள்.

பெண்கள் பாதுகாப்பாக இருந்தாலும் அவர்களுடைய வறுமை நிலையைப் பயன்படுத்தி பணம் படைத்தவர்கள் சீரழித்து விடுவார்கள். சில பட்டதாரிப் பெண் பிள்ளைகள் கூட சாதாரணமான கடைகளில் வேலை செய்கின்றார்கள். அவர்களின் அறிவையும் திறமைகளையும்  இன்றைய சமூகம் சரிவர பயன்படுத்தாமல் இருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் இன்று ஒருசிலர் பெண்களைப் பெண்களாகவே மதிப்பதில்லை. அவர்கள் வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பதை இழிவாகப் பார்க்கிறார்கள். இந்த நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். 

எனவே இனிவரும் காலங்களிலாவது பெண்கள் தூங்கிக் கொண்டிருக்காமல் தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்து அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று என்னைப் போன்ற பெண்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். 

விஜயலக்ஷ்மி, மட்டக்குளி (குடும்பத் தலைவி)

நான் மட்டக்குளி விஜயலக்ஷ்மி. மகளிர் தினத்தப் பொறுத்தவரையில அது பெண்களுக்கான ஒரு விசேட தினமாகும். ஆரம்ப காலத்துல அடுப்படியில் முடங்கிக் கிடந்த பெண்கள் இன்று பெரிய பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். தமக்கென்று வருமானத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். சமூகத்தில் ஏனையவர்கள் மதிக்கும் விதத்தில் நடந்து கொள்கிறார். ஆனாலும் ஒரு சின்னக் கவலை. எவ்வளவு பெரிய தொழிலில், இருந்தாலும் பதவியில் இருந்தாலும் வீதியில் இறங்கினால் அவர்களின் நிலை வேதனையானதுதான்.

ஒழுங்கான பாதுகாப்பில்லை, பஸ்ஸில் ஏறிõனால் நிம்மதியாக ஓரிடத்துக்குச் செல்ல முடியாது. சில அநாகரிகமானவர்களின் நடத்தைகள் மிகவும் வேதனை தரக்கூடியதாகவே இருக்கின்றது. பெண் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்பினால் அவள் திரும்பி வரும் வரையில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுதான் தாய்மார் இருக்க வேண்டும்.

எனவே இந்த மகளிர் தினத்திலிருந்தாவது பெண்களின் பாதுகாப்பு விடயத்தில் உரிய அதிகாரிகள் அக்கறை எடுத்து அதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வினிபீடா பிந்து (நகர சுத்திகரிப்புத் தொழிலாளி)

நான் வினிபீடா பிந்து.எனக்கு மூன்று பிள்ளைகள். மூவரும் பெண்பிள்ளைகள்தான். எனது கணவர் இறந்து விட்டார். அதற்குப் பிறகு குடும்பப்  பொறுப்பை நான்தான் சுமக்கிறேன். 11 வருடமாக இந்த  நகர சுத்திகரிப்பு தொழிலை செய்கிறேன். ஒரு நாள் கூட இத்தொழிலை நான் கௌரவக் குறைச்சலா நினைச்சது கிடையாது. மனநிம்மதியோடு தான் செய்யிறன். எனக்கு இதால மாதச் சம்பளம் ஒன்று கிடைக்கிறது. அந்தக் காசு குடும்பத்த நடத்துறதக்கு போதுமானதாக இருக்கிறது. இன்னொருவரிடத்துல கையேந்தாம குடும்பத்த நடத்துரன். 

எனது மூத்த மகள் ஒரு கடையில் கணக்காளராக வேலை செய்கிறார். இரண்டாவது மகள் சட்டக் கல்லூரி நுழைவுக்காக படிக்கிறாள். மூன்றாவது மகளும் படித்துக் கொண்டிருக்கிறாள். இந்தத் தொழிலைச் செய்து அவர்களைப் இவ்வளவு தூரம் படிக்க வைக்க முடிவதை நினைத்து பெருமை படுறன். பெண்கள் தினம் கொண்டாடப்படுவது ஒரு நல்ல விடயம் தான். நான் பெரியளவில அதுகள்ள ஈடுபடாவிட்டாலும் ஒரு பெண் என்ற அடிப்படையில் எங்களப்பத்தி சிந்திப்பதற்காக ஒரு நாள் இருக்கிறது என்பத நினைத்து சந்தோசப்படுறன்.

திமுத்து ஆட்டிகல. (சுதந்திரத்துக்கான பெண்கள் அமைப்பின் தலைவர்)

இந்த வருடம் பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்ச் முதலாம் திகதியில் இருந்து இன்று வரை பல நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தி வருகிறோம். இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரையில் மனித உரிமைகள் மீறப்பட்டு பெண்கள் பாரியளவில் உளரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. முக்கியமாக வெளிநாடுகளுக்கு வேலைகளுக்குச் செல்லும் பெண்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்  செய்திகளை நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை அவர்களுக்கு சொந்த வீடடில் கூட தனியாக இருக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. 

எனவே இவ்வாறு சிவில் சமூகத்தில் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளில் இருந்து அவர்களை விடுவித்து சிறந்ததொரு பெண்கள் சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் இந்த வருடம் நாம் பல நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம். 


Tuesday, March 5, 2013

தெலைபேசியால் பறிக்கப்பட்ட உயிர்


பஹமுன அஸாம்

2013.02.28 ஆம் திகதி தினக்குரல் உதயசூரியனில் பிரசுரமான எனது கட்டுரை

மாதா பிதா குரு தெய்வம் என தொன்று தொட்டு போற்றி வருகிறோம். ஆனால் இன்று ஒரு சில அதிபர் ஆசிரியர்களின் மனித நேயமற்ற செயற்பாடுகளால் அவர்களே மாணவர்களுக்கு எமனாக மாறும் பல சம்பவங்களை நாம் கேள்விப் படுகின்றோம்.

அவ்வாறானதொரு சம்பவம் தான் நிஷாதி மகேஷிகா என்ற மாணவிக்கும் நடந்துள்ளது. மினுவாங்கொடை நாலந்தா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற 18 வயதான இந்த உயர்தர வகுப்பு மாணவி தனது பாடசாலை அதிபரின் இரக்கமற்ற நடவடிக்கையால் அநியாயமாக இன்று இவ்வுலகைவிட்டே பிரிந்து சென்று விட்டாள். இத்தனைக்கும் மூல காரணமாக அமைந்தது ஒரு கையடக்கத் தொலைபேசியே.

வருட ஆரம்பம் என்றாலே பாடசாலைகளுக்கு திருவிழாக் காலம் தான். விளையாட்டுப் போட்டி, சுற்றுலாக்கள் என்று பாடசாலையே களை கட்டிவிடும்.மகேஷிகாவின் பாடசாலையிலும் விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்றன.

ஹீனடிய கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் ஆடி அம்பளம எட்வட் டி சில்வா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் தனது ஆரம்பக்கல்வியைப் பயின்ற மகேஷிகா எல்லா வகுப்பிலும் முதல் மாணவியாக வரவும் தவறவில்லை. சாதாரணதரத்தில் சிறந்த பெறுபேற்றைப் பெற்ற அவள் பெரிய பாடசாலைகளுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தும் அதிக தூரம், பாதுகாப்பு போன்ற விடயங்களைக் கருத்தில் கொண்டு செல்லவில்லை. உயர்தரப் படிப்பையும் மினுவாங்கொடை நாலாந்தாவிலேயே கற்று வந்தாள். 

அன்று ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வியாழக்கிழமை. அன்று அவர் நினைத்திருக்கமாட்டார் அதிபர் வடிவில் எமன் தன்னை நெருங்குவதை. நிஷாதி மகேஷிகாவின் பாடசாலை விளையாட்டுப் போட்டி அவளது பாடசாலைக்குறிய மைதானத்தில் நடைபெறவில்லை. வேறு ஒரு பொது மைதானத்திலேயே நடை பெற்றது. ஏற்கனவே அவள் விளையாட்டு மற்றும் ஏனைய துறைகளில் வெளிப்படுத்திய திறமைகளுக்கான சான்றுகள் குவிந்து கிடக்க, இந்த விளையாட்டுப் போட்டியில் மேலும் சில சான்றிதழ்களும் கேடயங்களும் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போடு விளையாட்டுப் போட்டி நடைபெறும் மைதானத்துக்குச் செல்ல ஆயத்தமாகிறாள். சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று அதன் பிறகு பஸ்ஸில் செல்ல வேண்டும். ஒரு வேளை விளையாட்டுப் போட்டி முடிந்து வரும்  போது தாமதமாகிவிட்டால் பஸ்ஸில் வந்து பிறகு தனியாக இருட்டில் நடந்து வர முடியாது என்பதால். கூட்டிக் கொண்டு போக வரும்படி  தந்தைக்கு தொலைபேசி அழைப்பெடுப்பதற்காக தாயின் அனுமதியோடு கையடக்கத் தொலைபேசியையும் எடுத்துக் கொண்டு செல்கிறாள். 

விளையாட்டுப் போட்டி களைகட்டி சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அவ்வேளை பாடசாலை மாணவத் தலைவிகள் கையடக்கத் தொலைபேசி உள்ளதா என சகமாணவிகளிடம் சோதனையில் ஈடுபடுகிறார்கள். சில மாணவிகள் தமக்குப் பக்கத்தில் இருந்த  பெற்றோர்களிடம் தெலைபேசியைக் கொடுத்து தந்திரமாகத் தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் மகேஷிகாவால் அவ்வாறு செய்யமுடியவில்லை. மாணவத் தலைவியர்களில் இருவர் மகேஷிகாவின் தொலைபேசியை எடுத்துக் கொண்டனர் பிறகு அத்தொலைபேசி அதிபரின் மேசைக்குச் செல்கிறது. செய்வது அறியாது திகைத்த மகேஷிகா அச்சம், விரக்தியோடு வீட்டுக்குச் செல்கிறாள். 

மறு நாள் வெள்ளிக்கிழமை. விளையாட்டுப் போட்டியின் களைப்பு கால் வலி காரணமாக பாடசாலைக்குச் செல்லவில்லை. சனி ஞாயிறு தொடர்ந்து நான்காம் திகதி சுதந்திர தினம். ஐந்தாம் திகதி செவ்வாய்க்கிழமை தாயையும் அழைத்துக்  கொண்டு பாடசாலைக்குச் செல்கிறாள். அங்கு அதிபரின் பேச்சுக்களால் தாயும் மகளும் தலைகுனிந்து நிற்கின்றார்கள். தெலைபேசியில் தேவையில்லாத படங்கள் வைத்திருப்பதாக அதிபர் கூறியதைக் கேட்டு மகேஷிகாஅதிர்ந்து போனாள். “இல்லை அப்படி ஒரு படமும் எனது தொலைபேசியில் இல்லை. நண்பிகளுடன் எடுத்த படங்கள் மாத்திரம் தான் அதில் இருக்கின்றன என ’மகேஷிகா தன் பக்கத்து நியாயத்தை அதிபருக்கு எடுத்துச் சொல்ல முற்படுகிறாள். ஆனால் “வாயை மூடு’ என்ற அதிபரின் அதிகார வார்த்தையால் மௌனித்துப் போகிறாள். 

“இரண்டு வாரங்களுக்கு வகுப்புத் தடை, உனக்கு இனி இங்கு இடமில்லை. வேறு பாடசாலை ஒன்றைத் தேடிக் கொள்’ அதிபரின் பேச்சுக்களால் மகேஷிகா மாத்திரமல்ல அவளின் தாயும் நிலைகுலைந்து போனார்.
பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த முதல் நாள் வேலைக்குச் செல்லத் தயாராகும் தாயை வீட்டில் இருக்கும்படி கேட்கிறாள் மகேஷிகா. தாயும் அன்று வேலைக்குச் செல்லாமல் வீட்டில் நிற்கிறார். ஆனால் எந்த நாளும் அப்படி இருக்கமுடியாது அல்லவா. மறுநாள் தாய் வேலைக்குச் செல்கிறார்.
வீடடில் தனியாக இருந்த மகேஷிகாவின் எண்ணங்கள் பல திசைகளில் பறந்தன. தாய் உட்பட எல்லோர் முன்பாகவும் பட்ட அவமானம், அயலவர்களின் “ஏன் பாடசாலைக்குச் செல்லவில்லை?’ என்ற கேள்வி, தனிமை போன்ற பல காரணங்களால் விரக்தியடைந்து மனம் குழம்பிப்  போன நிஷாதி மகேஷிகா இவை எல்லாத்துக்குமான தீர்வு தற்கொலை தான் என்ற முடிவுக்கு வருகிறாள். பூச்சிநாசினியை அருந்தி தனது வாழ்க்கைப் புத்தகத்துக்கு தானே முற்றுப்புள்ளியை வைத்துக் கொள்கிறாள்.

குறைந்த பட்சம் மகேஷிகாவின் இறுதிக் கிரியையின் போது நாலந்தாக் கல்லூரி மாணவியர்கள் பாடசாலை சீருடையில் இறுதி அஞ்சலி செலுத்துவதைக் கூட விரும்பாத கல்நெஞ்சம் படைத்தவராகவே அதிபர் செயற்பட்டுள்ளார். இந்தக் கட்டுரை எழுதும் வரைக்கும் அதிபர் தன்பக்கத்து நியாயத்தை எந்த ஊடகத்திலும் வெளியிட்டதாக அறிய முடியவில்லை. 
மகேஷிகாவின் இழப்பு ஊரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் தனது ஓய்வு நேரத்தில் தனக்குத் தெரிந்தவற்றை ஊரில் உள்ள சிறு பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு மகேஷிகா கருணையுள்ளம் கொண்டவளாக இருந்துள்ளாள்.

இது ஆரம்பமல்ல இதற்கு முன்னரும் இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. பாடசாலை மாணவர்கள் தற்கொலை என்பது சாதாரணவிடயம் போலாகிவிட்டது. தோட்ட மற்றும் கிராமப்புற பாடசாலைகளிலேயே தற்கொலை என்பது அடிக்கடி இடம் பெறுவதைக் கேள்விப்பட்டோம். ஆனால் தற்போது நகர்ப்புறப் பாடசாலைகளிலும் கொலை, தற்கொலைச் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுகின்றன.

மாத்தளை நதுன்கமுவ வித்தியாலயத்தில் சமில கருணாரத்ன என்ற மாணவிக்கும் சுமார் 12 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற ஒரு நிலை தான் ஏற்பட்டது. மற்றுமொரு சம்பவம் 2009 ஆம் ஆண்டு கறுவாத் தோட்டம் பகுதியில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றில் நடந்தது. 9 ஆம் தரத்தில் பயின்ற மாணவி ஒருவர் பாடசாலையினுள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் மதவாச்சி தம்மேன்னாவ பகுதியில் செவ்வந்தி சசினிகா என்ற 15 வயது மாணவி தனது கழுத்துப் பட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் டயகம மேல் பிரிவில் 16 வயது மாணவியொருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

புசல்லாவையைச் சேர்ந்த சஹானா என்ற மாணவி சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் திருப்தியில்லை என்று தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு பல சம்பவங்களை அடுக்கிக் கொண்டே செல்லலாம். பாடசாலை மாணவர்களின் தற் கொலையைப் பொறுத்தவரையில் கைடக்கத் தொலைபேசி, காதல் தொடர்புகள் பாலியல் வல்லுறவு விவகாரங்கள், பெறுபேறுகள் திருப்தியின்மை, அதிபர் ஆசிரியர்களின் தவறான, பிறழ்வான நடத்தைகள் போனறனவே முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

எனவே இது போன்ற விடயங்களில் ஆசிரியர்களும் மாணவர்களும் முன்னேனெச்சரிக்கையாக நடந்து கொள்ள  வேண்டும். மாணவர்கள் விடும் பிழைகளை பகிரங்கமாகச் சொல்லி அவர்களை அவமானப்படுத்தக்கூடாது. மனஉளைச்சலை ஏற்படுத்தி அவர்களின் மரணத்துக்கு காரணமாக இருந்து விடாமல், மாணவர்கள் விடும் தவறுகளை உரிய முறையில் பக்குவமாக கையாண்டு அவர்களைத் திருத்த வேண்டும். இவ்வாறான ஆசிரியர்களை மாணவர்கள் எக்காலத்திலும் மறந்து விடமாட்டார்கள். மாறாக மனதில் வைத்துப் போற்றுவார்கள் அவர்கள் வாழ்வில் வெற்றிபெற்றாலும் தோல்வியடைந்தாலும் அவர்களது மனதில் என்றும் நிலைத்து நிற்பார்கள். 

எது எப்படியோ போன உயிர்கள் திரும்பி வரப் போவதில்லை. ஆனால் இனியும் நாம் இது போன்ற மகேஷிக்காக்களையும் சமிலாக்களையும் இழக்கக் கூடாது. பழைய மாணவர்கள் சங்கம், பெற்றோர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்று எத்தனையோ குழுக்கள் சகல பாடசாலைகளிலும் இயங்குகின்றன. இவைகள் வெறுமனே பெயரளவில் இயங்காது இது போன்ற விடயங்களில் கவனம் எடுத்துச் செயற்பட்டால் இத்தகைய அநியாயமான உயிரிழப்புக்களைத் தவிர்க்கலாம்.